கடும் அழுத்தங்கள் மற்றும் அனைத்துலக நிர்ப்பந்தங்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) பேச்சாளர் சிறிலங்காவை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்று அரசு நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதனை அடுத்து ஐ.நா.வின் மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் நாளுக்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும்.
யுனிசெஃப்பின் சிறிலங்காவுக்கான பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்ட சிறிலங்கா அரசு, அவரது விசா பத்திரத்தை நேற்று முன்நாளுடன் இரத்துச் செய்திருந்தது.
எனினும் பின்னர் அவர் வேண்டிக் கொண்டதன் அடிப்படையில் 21 ஆம் நாள் வரை அவர் நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஜேம்ஸ் எல்டர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார் என அரசு கூறியது.
அரசின் இந்த முடிவை யுனிசெஃப் அமைப்பு கடுமையாகக் கண்டித்திருந்தது. ஜேம்ஸ் எல்டர் தொடர்ந்தும் சிறிலங்காவில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்று அது வலியுறுத்தி இருந்தது.
ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் சிறிலங்கா அரசின் முடிவால் நாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என்பதுடன் அதிருப்தியும் அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார் யுனிசெஃப் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ஆன் வெனுமான்.
எனினும் இந்த வெளியேற்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நோக்குடன் யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. அரசின் முடிவு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என யுனிசெஃப் நேற்று முன்நாள் திங்கட்கிழமை எதிர்பார்ப்பு வெளியிட்டிருந்தது.
அப்படி இல்லையேல் இந்த விவகாரத்தை தாம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டம் வரைக்கும் எடுத்துச் செல்லப் போவதாக யுனிசெஃப் அமைப்பின் பிராந்திய தகவல் தொடர்பு தலைமை அதிகாரி சாரா குரோவ் எச்சரித்திருந்தார்.
ஆனால், சிறிலங்கா அரசு தனது முடிவில் தீர்மானமாக இருக்கின்றது. அத்துடன், நாட்டை விட்டு வெளியேறுமாறு எல்டருக்கு சட்ட ரீதியான கடிதமும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
எல்டரை வெளியேற்றும் முடிவில் சிறிலங்கா உறுதியாக இருக்கின்றது என்பதை சாரா குரோவ் இன்று உறுதிப்படுத்தினார்.