Friday 4 September 2009

ஏன் இந்த கொடுமை எங்கள் தமிழ் இனத்துக்கு...இனியாவது தமிழர் நாம் ஒன்றிணைந்து ஈழத்தை பெறுவோம் என்று உறுதி கொள்வோமா ???


விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல.அது தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விடுதலை இயக்கம்.தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.
புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விடயம்.

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வு பூர்வமாக ஒன்றுபட வேண்டும். உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான்.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த இந்த உலகம், ஆயுதம் ஏந்தி போராடியதும் எங்களை திவிரவாதி என்றது இந்த உலகம்...

எத்தனை உறவுகள் நாளுக்கு நாள் செத்து மடிகிறார்கள் படு காயத்திற்குள்ளாகிறார்கள் இருந்தும் சர்வதேசம் வேடிக்கை பார்த்து தங்களுடைய சுய நன்மைக்காக எங்களுடைய மக்களின் அவலங்களை வேடிக்கையாக்கி விமர்சிக்கிறது.

இப்படியான பேரவலம் ஏற்படும்போது ஜனநாயக நாடாக யார் தங்களை முத்திரை குத்துகிறார்களோ அவர்களெல்லாம் முன்வரவேண்டும் மக்களின் அவலங்களை போக்கவேண்டும். ஆனால் இதற்கு மாறாக இந்தப் பேரவலத்தை அரசியல் ஆக்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது.
ஜனநாயக நாடாக முத்திரை குத்திய பல நாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று தங்களுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டது

ஏன் இந்த கொடுமை எங்கள் தமிழ் இனத்துக்கு...இனியாவது தமிழர் நாம் ஒன்றிணைந்து
ஈழத்தை பெறுவோம் என்று உறுதி கொள்வோமா ???

நன்றி,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

புலிகளுடனான இறுதி யுத்தத்த போர்க் காட்சிகளைக் கொண்ட அனைத்து ஒளிப்பதிவு நாடாக்களும் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டுள்ளது:

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட போர்க்காட்சிகளைக் கொண்ட அனைத்து வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களையும் உடனடியாக தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் தொலைக்காட்சிப் பணிப்பாளர்களுக்கு ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா உத்தரவிட்டுள்ளார்.

வன்னியின் இறுதிப் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட ஓளிபரப்பப்பட்ட மற்றும் ஒளிபரப்பப்படாத அனைத்து வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களையும் இந்நிறுவனங்களின் பணிப்பாளர்கள் உடனடியாகத் தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

அமைச்சரின் இந்த திடீர் உத்தரவு அண்மையில் சனல் 4, அல்ஜசீரா, பி.பி.ஸி, சி.என்.என் உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்ட நிராயுதபாணியான, நிர்வாணமாக்கப்பட்ட இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் கூட்டுப் படுகொலை செய்வதான வீடியோ நாடாவுடன் தொடர்புபட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது அரச ஊடகங்களான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன்க்கு மட்டுமே விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது அப்பகுதிகளுக்குச் செல்லவும் அவற்றைப் படம் பிடிக்கவும் அறிக்கையிடவும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப்போர்

சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், நல்லாட்சி விடயத்தில் ஆளும் மகிந்த அரசு காண்பிக்கும் பொறுப்பற்ற போக்கு, சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறை, தெளிவான திட்டமிடலுடன் அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு போன்ற பல விடயங்களில் சீற்றமடைந்துள்ள மேற்குலகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தும்வகையில் மறைமுகமாக பல்வேறு அரசியல் - இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.


போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மனித உரிமைகள் என்ற விடயத்தில் மேற்குலகத்தின் பேச்சை கேட்காத சிறிலங்கா அரசை மேற்குலகம் வெளிப்படையாக சாடியது. சிறிலங்கா அரசும் பதிலுக்கு மேற்குலகுக்கு எதிராக தனது தெளிவான - திட்டமிட்ட - பிரசாரபோரை முன்னெடுத்தது மட்டுமல்லாமல், தனது போர் நிகழ்ச்சிநிரலுக்கு ஓத்துழைக்காத மேற்குலகுக்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தும்வகையில், பணி நிமிர்த்தம் சிறிலங்காவை தளமாக கொண்டியங்கிய மேற்குலக ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் பலருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது.

- சிறிலங்காவின் உண்மைநிலவரங்களை தமது செய்திசேவைக்கு வழங்கிவந்த மேற்குலக ஊடகவியலாளர்களின் விசா நீடிப்பை இரத்து செய்து அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.

- சிறிலங்காவின் போர் நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாக விமர்சித்த சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் விசாவை இரத்து செய்து நாட்டுக்கு வருவதற்கான அனுமதியையே மறுத்தது.

- போரில் சிக்குண்ட மக்களுக்கான அவசர உதவிகளை மேற்கொண்டுவந்த அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளின் மூலம் தமது படுகொலைகளின் சாட்சியங்கள் வெளியேறிவிடக்கூடாது என்ற நோக்குடன் அவர்களின் விசாக்களை நீடிப்பு செய்யாமல் அவர்களையும் நாட்டைவிட்டு அனுப்பியது.

- அண்மையில் கனடாவை சேர்ந்த முன்னாள் அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான பொப் ரே அவர்கள் சிறிலங்காவுக்கு சென்றபோது அவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியது.

- வவுனியாவில் தடுப்பு முகாங்களில் உள்ள தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வந்த ஐ.நா தொண்டு நிறுவனமான யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்டர் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடு கடத்தப்படவுள்ளார் என தெரியவருகிறது. தடுப்பு முகாங்களில் உள்ள மக்கள் பட்டினியால் உயிரிழப்பதாகவும், குழந்தைகள் போசாக்கு இல்லாமல் பாதிப்படைகின்றனர் என ஜேம்ஸ் எல்டர் உண்மைக்குப் புறமான தகவல்களை வெளியிட்டுள்ளாரென அவர் மீது சிறிலங்கா அரச தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அதிக கவனம் செலுத்தியதாகவும் பாதுகாப்புப் படையினர் இவர் குறித்து படை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் இதனை தொடர்ந்தே ஜேம்ஸ் எல்டரை நாடுகடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் தனது நாடு கடத்தல் நடவடிக்கையை இரத்து செய்யும் நடவடிக்கைகளை ஜேம்ஸ் எல்டர் பல வழிகளில் மேற்கொண்ட போதும் அவை பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல சம்பவங்களின் மூலம் மேற்குலகின் சீற்றத்தை மேலும் ஆரோகணிக்கும் செயற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்ட சிறிலங்கா தனது ஆட்சி பாதையை புறம்பான அரசியல்தளத்தை நோக்கியதாக அமைத்துக்கொண்டது.

மேற்குலகுடன் கைகோர்த்து தனது காரியங்களை முன்னெடுப்பது போன்ற தோரணையை வெளிவாரியாக காண்பித்து, சிறிலங்கா அரச அதிபர் முதல் இராஜதந்திரிகள் வரை பேட்டிகளிலும் புகைப்படங்களிலும் ஒருவித வெளிபார்வைக்கேற்ற அரசியலை சிறிலங்கா மேற்கொண்டுவருகின்றபோதும், மேற்குலகுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான முன்னைய உறவுநிலை தற்போது இல்லை என்பதே உண்மை.

இதனை மேற்குலகும் தனது பங்குக்கு பதிலடியாக அண்மைக்காலமாக காண்பித்துவருகின்றமை இங்கு குறிப்பிடக்கூடிய விடயம்.

உள்நாட்டில் மனித உரிமை மீறல்களையும் தான் நினைத்தவாறு ஆட்சியையும் நடத்திவரும் சிறிலங்கா அரசுக்கு தண்டனை கொடுப்பது போலவும் தனது சர்வதேச இருப்புக்கு கரி பூசியது போல அரச தரப்பில் அறிக்கை விடுத்து சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கு பதிலடி கொடுப்பதுபோலவும் மேற்குலகம் அண்மைக்காலமாக தனது நடவடிக்கைகளையும் மறைமுகமாக - மிக மும்முரமாக - மேற்கொண்டுவருவதை காணமுடிகிறது.


இந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அதிபர் தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளப்போவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆனால், உள்நாட்டில் இடம்பெற்ற போரில் பாரிய மனிதப்பேரவலத்துக்கு காரணமான இராணுவ அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் அவை கூட்டத்துக்கு அழைத்து அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குவதில்லை என்பதில் மேற்குலகம் இம்முறை உசாரடைந்திருக்கிறதுபோல் தெரிகிறது.

இதனால், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சிறிலங்கா அரசின் சார்பில் விண்ணப்பித்த பல இராணுவ அதிகாரிகளின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மூக்குடைபட்டுக்கொண்ட சிறிலங்கா அதிபர் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் பங்குபற்றாமல், பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை கூட்டத்தொடருக்கு அனுப்பமுடிவு செய்துள்ளார் எனத்தெரிகிறது.

இதைவிட, ஏற்கனவே மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகி இருக்கும் படையதிகாரிகள் மற்றும் பலருடைய விஸாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, சிறிலங்கா பாதுகாப்புதரப்பின் ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்பக்வெலவின் கனடாவுக்கான விசா விண்ணப்பம் கனடிய தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் மேல்மாகாண முதல்வர் அலவி மௌலானாவினதும் அவரது குடும்பத்தாரதும் பிரித்தானியாவுக்கான விஸா விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் பிரித்தானியாவிற்கான விஸாவுக்காக விண்ணப்பித்த போது அவர் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

பூகோள அரசியல் மாற்றத்துக்கு உட்பட்டிருக்கும் புதிய அணியுடன் கைகோர்த்துள்ள சிறிலங்கா அரசு, மேற்குலகின் நிரந்தரமான அதிருப்தியை சம்பாதித்திருக்கும் இந்தவேளையில், இனிவரும் காலங்களில் இப்படியான - தொடர்ச்சியான - அனுபவங்களை கற்றுக்கொள்ளநேரிடும். இதில் மேற்குலகம் விடாப்பிடியாக உள்ளது போலவே தெரிகிறது. மகிந்த அரசுடனான மேற்குலகின் இந்த மறைமுக பனிப்போர் வெளிப்படையாக வெடித்து செயல்வடிவில் மூர்க்கமடையும் காலமும் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது!

ஈழம்-இந்தியம்-சர்வதேசம்:
விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது!

சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது!

இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.

இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.

அதேசமயத்தில் இந்தியப் பேரரசின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தங்களது அரசியல் போட்டிகள் காரணமாக- ஈழப் போராளிகளிடையே அப்போது நிலவிய வேறுபாடுகளை தமக்குச் சாதகமாக்கி அதில் ‘குளிர்காயத்’ தவறவில்லை. அது இன்றும் தொடர்கிறது என்றாலும் அன்று அந்தத் தலைமைகளது நடவடிக்கைகள் ஈழத்தின் போராட்டக்களத்தினைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

ஆனால், இன்று ஈழப்போராட்டம் மூர்க்கமாக நசுக்கப்பட்டு மூன்றுலட்சம் தமிழர்கள், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக; வன்னிப்பெரு நிலத்தின் திறந்த வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் உள்ள ‘ராஜபக்ஷாசுர’ தாண்டவத்தின் பின்னரும்கூடத் தொடர்ந்துகொண்டிருப்பது வேறு விஷயம்! இதனைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

எந்த உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று; இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ‘தந்தை செல்வா’ முதல் ‘பிரபாகரன்’ வரை போராடிவந்தார்களோ----- அந்த உரிமைகளில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும், மாறாக; மக்கள் ‘மாக்க’ளிலும் கீழாய்ச் சிங்கள அரசால் நடாத்தப்படும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

இதனை இந்தியமும், சர்வதேசமும் நன்கு அறியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான்........

இந்தியா ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அக்கறை செலுத்துகிறது என்றும்; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் நாட்டங் கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சர்வதேசமும், இந்தியாவும் கடந்த இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக அந்நாட்டில் நடைபெற்று வந்த இனஒடுக்கல் பற்றியும் அதற்கு எதிராக ஈழத்தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறித்தும் எதுவும் அறியாது இருந்தனவா?

அதிலும் குறிப்பாக, இந்தியாவுக்கு--- இலங்கையின் இனப் பூசலும், சிங்கள ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளும் ஆரம்ப காலம் முதலே தெரிந்திருக்கிறது!

1964ல் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவான சமயத்தில் அது இந்தியவம்சாவழித் ‘தமிழர்கள்’ பற்றியது என்பது புரியாமல் இந்தியா அதனை அணுகியது என்று கூறிவிடமுடியாது. அதிகம் ஏன் ,1961ல் தமிழ் மாவட்டங்களில் ‘சிறீமாவோ’ அரசுக்கெதிரான அஹிம்சைப்போர் ‘தந்தை செல்வா’வால் வழிநடாத்தப் பட்டபோது அது தமிழகத்திலும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பும் ‘நேரு-கொத்தலாவலை’ காலத்திலேயே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் பாதுகாப்பு அந்நாட்டின் ஆளும் வர்க்கத்தால் வழங்கப்படவில்லை என்பது தெரிந்தே இருக்கிறது.

1983ல் நிகழ்ந்த ‘கறுப்பு யூலை’ ஈழத்தமிழர்களது உயிர்களுக்கும் அந்நாட்டில் பாதுகாப்புக் கிடையாது என்பதை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியதாகக் கூறலாமேயன்றி--- அதற்கு முன்புவரை அவர்கள் அங்கு பூரணமான உரிமைகளை அனுபவித்து வந்தார்கள் என உலகம் நம்பியதாக பொருள்கொள்ள முடியாது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான், ’இந்திராவின் இந்தியா’-ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலப்படுத்த முன்வந்தது. அதனைச் சர்வதேசமும் ‘பார்வையாளர் நிலையில்’ ஏற்றுக்கொண்டுமிருந்தது!

இதில் வேடிக்கை யாதெனில்,இந்தியா தமிழ்ப் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கிய போதும், பின்னர் இன்று அதேபோராளிகளின் புதிய தலைமுறையினரோடு சேர்த்து அவர்களனைவரையும் சிங்கள அரசின் கரங்களால் அழிப்பதற்கு முன்நின்ற போதும் இந்தச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ‘பார்வையாளர்களா’கவே செயற்பட்டுவந்திருக்கிறது என்பதுதான்!

இந்தியாவின் அணுகுமுறை

இந்தியாவைப் பொறுத்த மட்டில், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் படுகொலைகள், தனது காலடியில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அவை அனைத்தையும் காணாதது போன்று செயல்பட்டது மட்டுமல்லாமல் அதனை நிகழ்த்துவதற்குரிய எல்லாவகையான தொழில் நுட்ப-ஆயுத உதவிகளையும் சிங்கள அரசுக்கு அது வழங்கியிருக்கிறது.

தென் தமிழகத்து மக்கள் தங்கள் உடன் பிறப்புகளையொத்த ஈழத்தவர்கள் கோரமாகக் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதைப் பொறுக்காது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோதும், உணர்வுக் கொந்தளிப்பால் சில இளைஞர்கள் தீக்குளித்து மாண்டபோதும் தமிழகத் தலைமை ஒப்புக்காக கண்ணீர் விடவும்,(செல்லாத ஊருக்கு) கடிதம் எழுதவும் முன்வந்ததோடு தனது அரசியல் நாடகத்தை முடித்துக் கொண்டது. இது வேதனையானது மட்டுமல்ல வெட்கக்கேடானதுங்கூட..

இவ்வாறு இந்திய நடுவண் அரசோ, தமிழ் மாநில அரசோ சிறிதுகூட மனச்சாட்சியின்றிச் செயல்பட்டதை ஒவ்வொரு தமிழனும் அறிவான்.உலகும் அறியும்.

பின்னர், மேற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து , இறுதிப் போரின்போது மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் பன்னாட்டு அவையில் எழுப்பமுயன்ற ‘மனித உரிமை மீறல்’ குற்றச் சாட்டிலிருந்து ஸ்ரீலங்கா அரசினைப் பாதுகாப்பதற்காக இந்தியா செயற்பட்டதையும், தனது கூட்டாளிகளான வேறு சில வளரும் நாடுகளையும் இந்த அநீதிக்குத் துணைபோக வைத்ததையும் எவரும் மறந்துவிடவில்லை.

இந் நிலையில்தான் இந்தியா ஈழத் தமிழர்களது அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளது என்னும் பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்தியா, உண்மையாகவே தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தின் பொருளையும் உணர்ந்து, அதற்கேற்ப ஓர் அரசியல் தீர்வினை அந் நாட்டில் ஏற்படுத்தித்தருமா ? அவ்வாறு அது எண்ணினாலும் அந்நாட்டின் சிங்கள அரசு இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுமா? என்பது கேள்விக்குரியதே.

உண்மையில், இந்தியா; ஈழத்தமிழர்களது உணர்வுகளையோ அன்றித் தமிழகத்தின் சகோதரத் தமிழர்களது ஆதங்கத்தையோ புரிந்துகொண்டு செயல்படும் என்பது சந்தேகந்தான்!

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்திலும், அதன் பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்கள் என்னும் பெயரில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத ‘மந்தைத் திடல்’களில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களது தன்மானத்தையும், அவர்களுக்கான மனித உரிமைகளையும் சிறுமைப்படுத்தும் செயலினைச் சிங்க்ள அரசு செய்கின்றபோதும் அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்கா அரசினால் ‘போர் முடிந்துவிட்டது’ என்று அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமது பதவிகளையும்-வாரிசுகளின் வசதியான வாழ்க்கையினையும் மட்டுமே பெரிதாக நினைத்து, இனமானத்தையும் மனிதாபிமானத்தையும் அடகு வைத்துவிட்டு வெறும் வாய்ப் பேச்சில் தேனாய்-பாகாய் கசிந்துருகும் தமிழகத் தலைமையும் அதன் தோழமை நடுவண் அரசும் திடீரென தமது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு திறந்த மனதுடன் நியாயமான தீர்வொன்றினை ஏற்படுத்தித் தருவார்கள் என்று எவராவது கூறினால் அதனை நம்புவது கடினமாகத்தான் உள்ளது.

சர்வதேசத்தின் சாதனை

மற்றொரு பக்கத்தில்; விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது----- அதன் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராயாமல், ஆளுவோர்-ஆளப்படுவோர் என்னும் இருவித கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில்கொண்டு- ஆளும் வர்க்கத்துக்கு மற்றொரு ஆளும் வர்க்கம் உதவுவதே ‘உலக தர்மம்’ என்னும் சித்தாந்தத்தில் ஊறிப்போய் கண்முன் நிகழும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் கண்டுங்காணாதார் போன்று செயலாற்றுவதில்; சர்வதேசம் வல்லமை மிக்கதாக உருப்பெற்றிருக்கிறது.

அந்த வகையில் இலங்கை அரசின் எல்லாவகையான மனித உரிமை மீறல்களுக்கும் மறைமுகமாகத் துணைசென்றவையும், செல்பவையும் இந்தச் சர்வதேசங்கள்தாம்.

தமது நாட்டின் அரசியல்-பொருளாதார மேம்பாட்டிற்கு எது துணைசெய்வதாக அமைகின்றதோ –அது நியாயமற்றது ஆயினும் அதற்கு ஒத்தூதும் ‘நவீன சித்தாந்தத்திற்கு அடிமைப் பட்டுப்போன இந்தச் சர்வதேசங்கள்தாம் இவ் வருட முற்பாதியில் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் சிறிய கால இடைவெளியில் கொன்றழிக்கப்பட ஏதுவாக ஸ்ரீலங்காவுக்கு( முன் கூட்டியே) ஆயுதங்களை வழங்கியிருந்தன.

ஒருபுறம் அடக்குமுறை அரசுக்கு ஆயுதங்களையும், போர் நிபுணத்துவத்தையும் “நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு” என்னும் பெயரில் வழங்கிவரும் இந்நாடுகள், இது போன்ற “புரிந்துணர்வின்” பின்னால் மிதிபடும் மனித உரிமைகளையும், அதனால் ஏற்படும் மனித அவலங்களையும் பற்றிச் சிறிதுகூடச் சிந்திப்பதில்லை.

மாறாகத் தமது செயல்களுக்கு ஆதரவு தேடும் முகமாக, உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ முத்திரை குத்தி அவற்றைத் தனிமைப்படுத்தும் செயலிலும் முனைப்புக் காட்டுகின்றன.

விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம்- தீவிர வாதம்- இவை யாவும் உருவாவதற்கான பின்னணியே, சமூகத்தினதும்-ஆளும் வர்க்கத்தினதும் ‘அடிப்படை உரிமை மீறல்களே’ என்னும் அரிச்சுவடியினைப் புரிந்து கொள்ளாது- அல்லது புரிந்து கொள்ள மறுத்து, மேம்போக்காகத் தமக்குப் பிடிக்காத அல்லது அடங்காத இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ அடையாளம் இடும் அநீதியான அணுகுமுறை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிவிட்டிருக்கிறது.

ரஷ்ய-அமெரிக்கப் பனிப்போர் முடிவுற்று, தனக்குச் சவாலாக இருந்த “ரஷ்ய’ கட்டமைப்பு குலைந்து விட, அடுத்தடுத்து சோவியத் சார்பு கம்யூனிஸ நாடுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் சிதறடிப்பதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆற்றலை “நீண்ட கால நோக்கில்” உறுதிப்படுத்திய பின்னர், அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது படிந்தது.

போரிடும் வலிமை பெற்ற, அதே சமயம் தனது ஆற்றலுக்குச் சவாலாகவிருந்த சோவியத் ஒன்றியத்தையும் அதன் சித்தாந்தத்தில் ஊறிய நாடுகளையும் வலியழித்தாகி விட்டது. அடுத்து உலகப் பொருளாதார வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க வல்லரசு தனது கையில் எடுத்த ஆயுதந்தான் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது.

அதன் இந்தத் திட்டத்துக்கு வலுசேர்ப்பது போன்று ‘இரட்டைக் கோபுரத் தகர்ப்பும்’ ‘அல்கெய்டா’ நடவடிக்கைகளும் அமைந்து விட்டன.
தொடர்ந்து, அதிபர் ‘புஷ்’ நிகழ்த்திய ; ‘சதாம் ஹுசெய்னின் இரசாயன ஆயுதங்கள்’ குறித்த மிக்குயர் தொழில் நுட்ப உத்திகளுடன் கூடிய ‘நாடகம்’ சதாமுக்கு எதிரான போரிற்கு ஐ.நா வின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

உலகில் மற்றொரு ‘சண்டிய’ராக உருவாகிவந்த சதாமை அடக்கவும், போரிடுவதன் காரணத்தால் அவ்வாறு போரிடும் அணிகளது வளங்கள் நலிவடையும் என்னும் கணிப்பினாலும்- அமெரிக்கா-ஈராக் இவை இரண்டினையும் மோதவிடுவதில் (மறைமுகமாக) விருப்புக்கொண்ட வளரும் நாடுகளிற் சிலவும் அதிபர் ‘புஷ்’ஷின் இம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் விலகி நின்றன.

இதன் பயனாக விளைந்ததுதான் ‘சதாம் வதம்’!

அதனைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த அமெரிக்க-மேற்குலகிற்கு மாற்றாக, கிழக்கில் ‘சோவிய’த்தின் இடத்தைப் பிடிப்பதில் சீனாவும்-இந்தியாவும் போட்டியிட ஆரம்பித்தன.

இலங்கையின் இனப் பூசலில் இவ்விரு நாடுகளும் மூக்கை நுழைத்துக் கொண்டதும், ஈழத் தமிழரது விடுதலையினை செயலற்றுப் போகச்செய்ததையும், இந்தக் கோணத்தில்தான் ஆராயவேண்டும்

மேற்கு நாடுகள் பலவற்றில் ஸ்ரீலங்காவின் இனப் படுகொலைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும்- அதனைத் தொடர்ந்து ‘ஸ்ரீலங்காவைக் கண்டித்து மேற்குலகம் .பன்னாட்டுச் சபை வரை இலங்கை அரசின் ‘மனித உரிமை மீறல்களை’ எடுத்துச் சென்றதும், இந்தக் கிழக்கு-மேற்கு அரசியல் பலப் பரீட்சைக்கு களம் அமைத்துத் தந்தன.

இதில் ’பலிக் கடா’ ஆக்கப்பட்டது ஈழத் தமிழினந்தான்!

மனித உரிமை- மக்களாட்சிப் பண்பு- தனிமனித் சுதந்திரம்- பேச்சுரிமை- உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்று பல வகைகளிலும், கிழக்கை விடவும் பலபடிகள் முன்னேற்றம் பெற்றவையாக மேற்குலகம் உள்ளது!

பணத்துக்காக அல்லது அற்ப சலுகைகளுக்காக தனது உரிமையை விற்பது- பணத்தின் மூலம் பதவிகளை அடைவது-மனித விழுமியங்களைக் மதிக்காதிருப்பது- காலை வாருதல்- மத இன துவேஷம் போன்றவற்றில் இருந்து இன்னும் விடுபடாத நிலையே கிழக்கில் அதிகம் காணப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது அடிப்படை உரிமைகளை நியாயமான வகையில் பெற்றுத்தரும் நிலை இந்தியாவை விடவும், மேற்குலகத்திடமே அதிகம் உள்ளது.

இதற்குச் செயலுருக் கொடுக்கும் ஆற்றலும் ,இன்று புலம் பெயர் தமிழர்களிடமே தங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.
இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன், ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பழ மொழி ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது.
“அழுதாலும், பிள்ளை(யை) அவளே பெறவேண்டும்” என்பது அந்தப் பழமொழி!

ஆகையால், எமது ‘ஈழக் குழந்தை’யை நாம் பெற்றெடுக்க வேண்டுமாயின் நாம் தான் அதனை முயன்று பெற்றெடுக்கவேண்டும். பிறர் எமக்காக அதனைப் பெற்றுத் தருவர் என நினைப்பது அறிவுடமையாகாது.

இந்திய நலன்களுக்காக: வஞ்சிக்கப்படும் தமிழ் மக்களும் தமிழர் தாயகமும்.....?


இந்திய நலன்களுக்காக:
வஞ்சிக்கப்படும் தமிழ் மக்களும் தமிழர் தாயகமும்.....?


திட்டமிட்டு அரசாங்கத்தினால் அகதிகளாக்கப்பட்ட சம்பூர் மக்கள்

தமிழ் மக்கள் வாழும் திருகோணமலை கொட்டியார் களப்புக்கருகாமையில் உள்ள சம்பூர் பிரதேசம் மற்றும் அதற்கு அண்மையில் உள்ள கூனித்தீவு, நவரத்னபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். எந்த வித சட்ட செயற்பாடுகளுமின்றி அப் பகுதி மக்களின் பூர்வீக நிலப்பரப்பை கைப்பற்றிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இவ்வாறு உள்நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டிருக்கும் திருமலைத் தமிழ் மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு குடிநீர், நிலத்தடி நீர் மற்றும் பிற விநியோகங்கள் அற்ற மனித வசிப்பிடத் தகுதியற்ற வனப் பகுதியான இத்திக்குளம் பகுதியில் நிரந்தரமாகக் குடியேற்ற சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுத்து வருவதானது சிங்கள இனவாத செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாகும்.

சிறீ லங்கா அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவோட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான மின் நிலையம் அமைக்கப்பட முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல் கள ஆய்வுகள் மற்றும் இதர கள ஆய்வுகள் எதுவும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என்று மின்சார சபை உயரதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் 2007ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி ஜனாதிபதி மகிந்தவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியின் பிரகாரம், 10 ஆயிரம் ஏக்கர் பிரதேசம் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இதில் 500 ஏக்கர் பகுதி இந்திய அனல் மின் நிலைய அமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது எந்தவிதமான கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலே வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அவ்வாறான கள ஆய்வுகள் எதனையும் மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் மின்சார சபை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை இந்த பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழுகின்றனர்.

மற்றும் அவர்கள் பொருளாதார ரீதியாக இவ்விடத்தில் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்ற காரணங்களை முன்னிட்டு எழும் முரண்பாடுகளைக் கருத்திற் கொண்டு சம்பூர் பகுதியினை கைவிட்டு திருகோணமலையில் வேறு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பேச்சாளர் 2007ம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரியிருக்கின்றார்.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக ஊடக மற்றும் தகவல் பிரிவின் தலைமையாளர் ஸ்ரீ தினகர் அஸ்தீனாவின் கருத்துப்படி சம்பூர் பகுதி சிக்கல் நிலையினைக் கருத்திற்கொண்டு அனல் நிலையம் அப்பகுதியில் அமைப்பது குறித்து இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் எந்தவிதமான இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த சம்பூரின் 500 ஏக்கர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 500க்கும் அதிகமான வீடுகள் அதில் வசித்து வந்த மக்களின் அனுமதியின்றியும், முன்னறிவித்தல் இன்றியும் அரசாங்கம் அழிக்க நடவடிக்கை எடுத்திருந்தது இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தலின் பின்னராகும்.

அந்த அனல் மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சம்பூர் பகுதி மக்கள் சூனியப் பகுதி என்று இந்தியப் பிரதிநிதிகளுக்கு நிரூபணம் செய்ய அரசாங்கம் இவ்வாறு தமிழர் பூர்வீகப் பகுதியினை அழித்துள்ளது.

இது தொடர்பாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவித்தபோது பொழுது இவ்வீடுகள் தமது அமைச்சின் உத்தரவின் பேரில் அன்றி வேறு ஒரு அமைச்சின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தியா இப்பகுதியில் மின் நிலையம் அமைக்க தொடர்ச்சியாக விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் சீனாவின் உதவியினைப் பெற இலங்கை நடவடிக்கை எடுத்துதிருந்தது.

இந்த நிலையில் கேந்திர அரசியல் முக்கியத்துவத்தினைக் கருதியும், சீனா இப்பகுதியில் வேரூன்றுவது தொடர்பில் உள்ள அதிருப்தியையும் கருத்திற்கொண்டும் சம்பூர் பகுதியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காலூன்ற இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தியாவும் சீனாவும் பல்வேறு வழிமுறைகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குள் தலையிட மேற்கொள்ளும் முயற்சிகளும், இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புலிகள் என்ற பெயரிலான துன்புறுத்தல்களும் கே.பியின் கைதினாலும், வடக்கு தேர்தல்களின் தந்திரோபாய கொள்கைகளினாலும் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட முடியும்.

சரத் பொன்சேகாவை கொல்லும் நோக்குடன் 2006 ஏப்ரல் 25ம் திகதி புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் படையினர் மேற்கொண்ட முதல் யுத்த நடவடிக்கை சம்பூர் பகுதியின் மீது தரை வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் ஆரம்பமாகியது. இந்த மோதல்களினால் சம்பூர் மக்கள் கிடைத்தவற்றை வாரி சுருட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இம்மக்கள் தற்பொழுது மட்டக்களப்பு, கிளிவெட்டி, பட்டித்திடல், மற்றும் கட்டைப்பறிச்சான் பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் பரந்து வாழுகின்றனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்த பகுதியினை கையகப்படுத்திக் கொண்டார்.

சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொது மக்கள் அல்லர் என்றும் புலிகளினால் அங்கு தமது பாதுகாப்புக்கென அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள் என்று இம்மக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அவர்களினால் அவர்களின் வசிப்பிடங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

எனினும் 2006ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் திகதி திருகோணமலை மாவட்டச் செயலாளர் 2000ம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் வசித்த மக்கள் அப்பகுதியின் பூர்வீக மக்கள் என்றும் அவர்கள் அரசாங்கத்தினால் பதிவுக்குள்ளான மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த நடவடிக்கையினால் அகதிகளாகியுள்ள சம்பூர் மக்களின் பூர்வீகப் பகுதியினைத் திட்டமிட்டு அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது என்பது இதன் ஊடாக நன்கு புலனாகின்றது.

தற்பொழுது அகதி முகாம்களில் இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அளவற்றதாகும். இலங்கைப் பிரஜைகளாக வாழ்வதற்கான பின்னணியினை இந்த அரசாங்கம் இல்லாமற் செய்து விட்டது என்று சுட்டிக்காட்டும் இந்த இடம் பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு முகாமில் இருந்த போது கடந்த ஜுன் 16ம் திகதி பொலிசார் தடியடிப்பிரயோகம் நடத்தி வௌ;வேறு பகுதிகளுக்கு பலவந்தமாக அழைத்துச் சென்று முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

இதற்கு எதிர்;ப்பு தெரிவித்த மக்களை பொலிசாhர் ஈவிரக்கமின்றியும் நடத்தியுள்ளனர். வெளிநாட்டு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர் இந்த மட்டக்களப்பு முகாம்களுக்கு விஜயம் செய்வது இலகு என்பதனாலும், அதனால் தங்கள் உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்றும் கருதும் அரசாங்கம் இவ்வாறு மக்களை அதி உயர் பாதுகாப்பு வலய அண்மித்த முகாம்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. மட்டக்களப்புக்கு அண்மைப்பகுதிகளில் 11 முகாம்கள் இருந்ததாகவும், இதில் 5 முகாம்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இந்த முகாம்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தமிழர் தாயகம் பறிபோகும் போது நாம் தமிழீழம் என்பதை எழுத்திலும் பேச்சிலும் சொல்லிக்கொண்டிருந்து என்னசெய்யப்போகின்றோம் என்பதை சிந்திக்க துணிந்துள்ளோமா என்பதை நாமே நமக்காக கேட்டுக்கொள்ளுவோம்.

'சனல் - 4' ஒளிநாடா விவகாரத்தை சிறிலங்கா அமைச்சருடனான பேச்சின்போது கிளப்பிய ஐ.நா. செயலாளர் நாயகம்

சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் 'சனல்-4' காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவைச் சந்தித்த ஐ.நா. செயலாளர் நாயகம் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியதுடன், போரின் பின்னர் உருவாகியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்தாக 'ரொய்ட்டர்' செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

"நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்களின் பேச்சில் ஆராயப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருக்கும் நிலையில், வெளிப்படையாக இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அவர்கள் ஆராய்ந்தார்கள்" என இந்தச் சந்திப்பு தொடர்பாக நியூயோர்க்கில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிநாடா தொடர்பாகவும் இந்தப் பேச்சுக்களின்போது பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாக ஐ.நா. அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த காணொலிக் காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசு ஏற்கனவே நிராகரித்திருக்கின்ற போதிலும், பான் கீ மூன் இந்த விவகாரத்தைக் கிளப்பியபோது அமைச்சர் மகிந்த சமரசிங்க எவ்வாறு பதிலளித்தார் என்பதையிட்டு ஐ.நா. வட்டாரங்கள் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

காலநிலை மாற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறும் மாநாட்டின் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின்போதே அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்த காணொலி ஒளிநாடா தொடர்பாக தமது கரிசனையை ஐ.நா. சபை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே பான் கீ மூன் அது தொடர்பாக இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இந்த ஒளிநாடா தொடர்பான செய்திகள் தம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதாக ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ் நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளையில் ஐ.நா. சபையின் சட்டத்துக்குப் புறம்பான, எழுந்தமானமான விசாரணைகளற்ற படுகொலைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அல்ஸ்டனும், இது தொடர்பாக ஐ.நா. விசாரணை ஒன்றை தொடங்க வேண்டும் என கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருந்தார்.

திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறை; கருணாவுக்கு அமைச்சர் பதவியா?: ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி


திஸ்ஸநாயகம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் குறித்து ஊடக அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது;

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது, ஊடக சுதந்திரத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அவருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தொடர்பில் எனக்கு தெரியாது.

இலங்கையில் நீதிமன்றம் சுயாதீனமாகவே செயற்படுகின்றது. அதில் அரசியல் தலையீடுகள் இல்லை அரசாங்கம் தனது கொள்கையை நீதித்துறையில் கையடிப்பது இல்லை,

ஊடகவியாளர் திஸ்ஸநாயக்கத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக இரண்டு மேன்முறையீடுகளை செய்யலாம்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கில் அவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவினார் என்றே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்றார்.

இதனிடைய குறுக்கிட்ட ஊடகவியலாளர், உண்மையில் திஸ்ஸநாயகம் பயங்கவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என்று வைத்துக்கொண்டாலும் அவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்றனர்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் குற்றச்சாட்டுகள் இருக்கவேண்டும் இருவேறு சம்பவங்களை ஒப்பிடவேண்டாம் என்றார்.

எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்


"மறக்கமுடியுமா' நக்கீரனில் நான் எழுதத் தொடங்கி இது ஐம்பதாம் பதிவு. இரண்டு இதழ்களுக்கெனத் தொடங் கிய எழுத்து, காலம் தமிழ் வரலாற்றை சிலுவையிலறைந்த வலியின் கதறலாய் தொடர்கிறது. இப்போதும் நிறைவு செய்திடவே விருப்பம். எனினும் அரசியல் வெளி உண்மை அறுபட்டும், மானுடவெளி உணர்வு சலித்தும் கிடக்கின்ற ஒரு காலகட்டத்தில் இருள் கவிந்த பாலைவனத்தின் தூரத்துக் கூக்குரலாய் இன்னும் சில வாரங்கள் தொடரும். வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையின் தளிர்களாய் ஆங்காங்கு இயங்கிவரும் உணர்வு கொண்ட இளையர்களுக்கு இவ்விதழ் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

""எமது மக்களை போகவிடு'' (Let Our People Go) என்ற முழக்கத்தை செப்டம்பர் மாதத்திற்காய் "நாம்' (We) என்ற அமைப்பின் இளையர்கள் முன் வைக்கிறார்கள். முட்கம்பி வேலிகளுக்குள் சிறை யிடப்பட்டிருக்கும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்கள் அவர்தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையைக் கொடுங்கள் என்ற கோரிக்கையோடு வருகிறார்கள் இந்த இளையர்கள். தமிழர்களாய், மனிதர்களாய் இவர்களோடு இணைவோம்.

ஊர் என்றதுமே புதுவை இரத்தினதுரையின் மறக்க முடியா கவிதையொன்று மனதில் விரிந்தது. தேடிக்கண்டெடுக்க இரண்டு நாட்கள் ஆயின.

நேற்றெம் ஊரிருந்த காற்றில்

இதமான குளிரும்

நேர்த்தியான சுகமுமிருந்தது

சாணிமெழுகிய தலை வாசலில்

சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.

வாசலிறங்கக் கோலமிருந்தது.

வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ

உள்ளே வெளிச்சம் நல்கின.

அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்

குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்

நிறையும் மனமிருந்தது.

மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்

இருளெனும் எழிலிருந்தது.

அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க

சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்

தேவ நிலை சித்தித்தது.

ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,

கூத்துப் பாட்டும்,

நாதஸ்வர மங்கலமும்

தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு

எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.

சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக

பக்கத்திற் சுற்றமிருந்தது.

சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட

அத்தைமார் இருந்தனர்.

புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி

அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட

அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப் பொடியும்

வெள்ளி முரலும்

கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க

குஞ்சாச்சிமா இருந்தனர்.

நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே

பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.

தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர

திருக்கல் வண்டிகள் இருந்தன.

என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்.

சித்திரையிற் கஞ்சி.

ஆடியிற் கூழென

வாய்க்குக்கூட வரையறையிருந்தது.

அப்பனுக்கு மூத்தவன்

ஆத்தாளுக்கு இளையவனென

சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.

ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு

அதுவும் கால்நடையாகப் போகும்

வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.

மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.

அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.

சூடடித்துக் குவித்த நெல்லும்

கிழித்துலர்த்திய ஒடியலும்

நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.

தழுவிப் போனது காற்று.

உருகி உள்ளேறியது உறவு.

கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்

இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,

புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த

ஒற்றையடிப் பாதையிலும்,

வயல் வரப்பிலும்

வாய்க்காற் கரையிலும்

தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்

இணைந்ததும் பிணைந்ததுமென

இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைத்து

இடருருவிக் கிடக்கிறது வனப்பு.

துக்கித்திருக்கிறது சோபிதம்.

முற்றத்து முருங்கை நிறைகாய்

சுமைதாங்காது கிளை முறிய

மரமும் பாறிச் சரிகிறது -

உருவிச் சப்ப ஒருவரில்லை.

கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது

ஒருவரில்லை உரித்துத் தின்ன.

இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்

இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்

உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!

ஆம், உலகிடம் நம் மக்கள் இன்று வேண்டி நிற்பது ஒன்றுதான்! நாங்கள் ஊர் போய் சேர வழி செய்யுங்கள். ஊருக்குப் போனால் மீண்டும் போராட் டம் தொடங்குவார்களோ என்ற அச்சத்தில் இனத்தை யே வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்திடும் திட்டம்தான் திறந்தவெளி வதை முகாம்கள். அக் டோபர் வந்துவிட்டால் அவை மரண முகாம்களாகும். ஆதலினால் அனைவரும் முழங்குவோம்: ""எமது மக்களை போகவிடு. Let Our People Go''

போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை. இதோ பதில்:

மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது. பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்: ""தினையான் குருவியை பார்த்திருக்கி றீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளி களில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி... குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்... ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாது காத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றி யும், தன்னம்பிக்கையோடும் செய்யும். நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை

வைத்தேன்

வெந்து தணிந்தது காடு: -தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்

உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார். பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்க மாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சா தீர்கள்.

போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்.

பிரபாகரன் மேலும் பேசுவார்.

(நினைவுகள் சுழலும்)

ஈழம் : ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்


தமிழீழ விடுதலையின் நான்காம் போர் 19/5 வேதனைகளுடன் முடிந்த பிறகு, தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இடையில் புதியவகை ‘போதகர்கள்’ புறப்பட்டிருக்கிறார்கள்.

‘ஒற்றுமையுடன் இருப்போம்!

ஆயுதப் போராட்டம் வேண்டாம்.

அரசியல் போரே ஒரே வழி

இராஜதந்திர நகர்வுகளே தீர்வு தரும்!’


ஆகியவை இந்தப் புதிய போதகர்களின் மந்திரங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முதல் நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற சிங்கள இந்திய உளவுத் துறைகளின் பரப்புரைகளை மறுத்துரைக்காமல் அல்லது அவை உண்மையாகவே இருந்தாலும் அந்த சரிவுகளிலிருந்து போராட்டத்தை மீட்டு எடுத்து வழி நடத்தும் முயற்சிகளில் இறங்காமல் மேற்கண்ட மந்திரங்கள் சில பிரமுகர்களால் ஓதப்படுகின்றன.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிரிகளிடம் சரணடையச் செய்வதற்கான அனைத்துக் கூறுகளையும் இந்த நான்கு வரி மந்திரம் கொண்டுள்ளது. கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாபன் தொடக்கி வைத்த இந்தச் சரணாகதி மதம் புலம்பெயர் நாடுகள் கடந்து தமிழகத்திலும் வேர் பிடிக்க நுழைந்திருக்கிறது. ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்!’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன? இந்த அழைப்பு யாரை நோக்கி விடுக்கப்படுகிறது? இந்தச் சூழலில் இந்த அழைப்பின் தேவையும் நோக்கமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடினால் சரணாகதி மதத்தின் ‘தத்துவம்’ புரியும்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெடிய வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தமிழீழ மக்களின் அறுதிப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தேசம் ஓர் இயக்கம் ஒரே நோக்கம் - அது ஈழ விடுதலை, என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்ட கருத்து. ஆகவே, ‘ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோள் ஈழத் தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைவரும், தமிழீழ ஆதரவுப் போராட்டங்களில் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டுத்தான் நிற்கிறார்கள்.


நடந்து முடிந்த ஈழப் பேரவலத்தைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் சிறு உணர்வாளர் குழுக்களும் முரண்பட்டு மோதிக் கொள்ளவில்லை. மாறாக, சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு இலக்கு நோக்கியே செயல்பட்டார்கள். 19/5க்குப் பிறகான தமிழீழ ஆதரவு அரசியற் செயல்பாடுகளில் சில முரண்கள் தமிழ்த் தேசிய இயக்கங்களிடையே முதன்மைப் படுத்தப்படுகின்றன.


• தமிழ்த் தேச விடுதலையும் தமிழீழ விடுதலையும் ஒருங்கிணைந்த புரட்சிகர நடவடிக்கைகளாக அணுக வேண்டும்.

• இந்தியாவைத் தமிழினம் தமது பகை சக்தி என்று புரிந்து கொண்டு அதனடிப்படையிலேயே எதிர்கால இனவிடுதலைப் போராட்டத்தைத் திட்டமிட வேண்டும்.

- இவை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைப்பாடுகள்.

• தமிழீழ விடுதலையே முதன்மையானது. தமிழ்த் தேச விடுதலை இரண்டாம் கட்டத்திற்குத் தள்ளப்படவேண்டியது.

• இந்தியாவைத் தமிழீழ அரசியலின் நேச சக்தியாக மாற்றும் வகையில் அணுக வேண்டும்.

- இவை தமிழர் தேசிய இயக்கத்தின் நிலைப்பாடுகள். இவை தவிர வேறு சில முரண்கள் இருப்பினும், இன்றைய அரசியல் தளத்தில் விவாதப் பொருட்களாக இருப்பவை இவ்விரண்டு முரண்கள் மட்டுமே. இந்த கோட்பாட்டு மாறுபாடுகள் இருப்பதால், த.தே.பொ.க. வும், த.தே.இ.யும் மல்லுக்கு நிற்கவில்லை. அவரவர் தளங்களில் இவ்வியக்கங்கள் தமிழீழ விடுதலை தொடர்பான பணிகளை இடையறாது மேற்கொண்டு வருகின்றன. இம்முரண்கள் தவிர, தமிழகத்தில் ஈழவிடுதலையை ஆதரிப்போர் இடையில் ஈழவிடுதலை குறித்த பெரிய முரண்கள் ஏதுமில்லை!

‘நாம் தமிழர்’ என்ற பெயரில் கடந்த 18ஆம் நாள் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ஆகியோர், ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்! இந்த வேண்டுகோள் யாருக்கு விடுக்கப்படுகிறது? கட்சித் தமிழன் என்றால்… தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதா ‘நாம் தமிழர்’ கொண்டுள்ள விருப்பம்.?

ஆம் எனில் அது போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சி. ஆனால், அம்மாநாடு வலியுறுத்திய செய்தி, தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் கட்சிகள், இயக்கங்கள் தனித்துச் செயல்படுகின்றன.. அவை ‘நாம் தமிழர்’ என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்!

செல்வராசா பத்மநாபனும் புலம்பெயர் தமிழர்களிடையே ‘ஒன்றிணைவோம்’ என்றுதான் பரப்புரை செய்கிறார். இவர் வேண்டுகோள் விடுப்பது யாருக்கு? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு பல்லாண்டு காலமாக ஒன்றிணைந்து செயல்படும் ஈழத்தமிழர்களிடத்தில்! கே.பி. யின் வேண்டுகோளின் உண்மையான பொருள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஒதுக்கிவிட்டுத் தன் தலைமையின் கீழ் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்பதே!

தமிழ்நாட்டில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கோட்பாட்டுக் குடையின் கீழ் ஏற்கெனவே திரண்டு நிற்கும் பெருந்திரளை நோக்கி ‘ஒன்றுபடுங்கள்’ என்று ‘நாம் தமிழர்’ அறைகூவல் விடுப்பதற்கும் கே.பி.யின் அழைப்பிற்கும் அடிப்படையான ஒற்றுமைகள் உள்ளன.

கே.பி. முன்வைக்கும் அணுகுமுறைகள்:

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இனி அரசியல் வழியில் மட்டுமே முன்னெடுக்கப்படும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ‘வன்முறை’ வழிகள் இனி பலன் தராது. இந்திய சிங்கள அரசுகளுடன் நல்லுறவின் அடிப்படையில் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெற வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்றரை இலட்சம் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கவனமாகச் செயல்படவேண்டும். (இவை தவிர ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைப்பதும் இத்தலைப்பின் கீழ் அடங்கும். ஆயினும் இத்தலைப்பு இக்கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.) ‘நாம் தமிழர்’ மாநாட்டில் இதே அணுகுமுறைகளை வழிமொழியும் கருத்துகளே பேசப்பட்டுள்ளன.

அருட்த்தந்தை ஜெகத்கஸ்ப்பர் : ‘தி.மு.க., அ.தி.மு.க, பா.ம.க, ச.ம.க., வி.சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அனைத்துச் கட்சிகளும் தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும்’.

‘மூன்றரை இலட்சம் தமிழர்களை வதை முகாம்களிலிருந்து மீட்பதற்காக, ராஜபக்சே காலில் கூட விழத் தயார்’.

இவை தவிர அம்மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்தியலும் ‘இந்திய அரசிடம் இணங்கிப் போவது, எந்த அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளாமலிருப்பது குறிப்பாக தி.மு.க.வுடன் சுமூக உறவு பேணுவது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. மாநாட்டில் உரையாற்றிய பலர் இந்த அடிப்படையிலேயே பேசினர். திரைப்பட உதவி இயக்குனர்கள் நடத்திய நாடகத்தில், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை விமர்சிக்கும் காட்சி ‘நாம் தமிழர்’ மாநாட்டில் நீக்கப்பட்டது.

‘ஒன்றிணைவோம்’ என்ற அழைப்பு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்துவதற்காக அல்ல, எதிரிகளிடம் சரணடைவதற்காகத்தான் என்பதை தமிழீழ அரசியலில் கே.பி.யின் செயல்பாடுகளும் தமிழக அரசியலில் ‘நாம் தமிழர்’ மாநாடும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

ஒட்டுக் குழுக்களின் ‘ஒற்றுமை யுணர்வு’!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாபெரும் இடர்களைத் தோற்றுவித்த ஒட்டுக் குழுக்கள் எப்போதும் முன்வைத்த மந்திரம் - ‘ஒன்றுபடுவோம்’ என்பதே. தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இந்தச் சதிகார ‘ஒற்றுமை’ குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போதைய ‘ஒன்றிணை வோம்’ மந்திரத்தின் பின்னாலிருக்கும் சதிவலையை உணர வேண்டிய அவசியம் இருப்பதால், விடுதலைப் புலிகளின் கடந்த கால அனுபவப் பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

"தனித்து நின்று போராடி தமிழீழம் காணவேண்டும் என்ற இறுமாப்போடு நாம் இயங்கவில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை வரித்துக் கொண்ட சகல விடுதலை அமைப்புகளும் எமது பொது எதிரியை எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதே எமது ஆவல்.

"…நாம் ஒற்றுமையை வரவேற்கவே செய்கிறோம். ஒற்றுமையின் தேவையை உணர்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமையானது தமிழ் ஈழப் புரட்சி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவோ, அன்றி பிற்போக்கு சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் நெருக்குதல் காரணமாகவோ, அவசரப்பட்டுச் சமைத்த சாம்பார் ஒற்றுமையாக அமைவதை நாம் விரும்பவில்லை.

"…நாம் விரும்புவது உண்மையான, நிரந்தர ஒருமைப்பாட்டையே. இந்த ஒற்றுமையானது புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பும் இலக்கில், வரலாற்றுப் போக்கினை உணர்ந்து கொண்ட தெளிவில், புரட்சிகர இலட்சியங்களிலிருந்து வழுவாத உறுதிப்பாட்டில், ஆழமான சகோதரத்துவப் புரிந்துணர்வில் புரட்சிகர சக்திகள் மத்தியில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும்".

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் - இதழ் - ஏப்ரல் 85)

ஈபிஆர்எல்எஃப், டெலோ, ப்ளாட், ஈரோஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சூழலில், இக்குழுக்களில் பெரும்பான்மை யானவை இந்திய அரசின் வளர்ப்புப் பிள்ளைகளாக வலம் வந்த நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழீழ மக்களை மட்டும் நம்பி இயங்கினர். பிற ஆயுதக் குழுக்கள் தமது இந்திய எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து செயல்படாதவர்கள். அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் எதேச்சாதிகாரக் குழுவினர்’ என்று பரப்புரை செய்தன. இந்தப் பரப்புரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியே மேலே கண்டது. இது தொடர்பான விவாதங்கள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் மிக ஆழமாகவும் நேர்மையாகவும் மேற் கொள்ளப்பட்டன. விளைவாக, 1985 ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O)

3. ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S)

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F)

ஆகிய நான்கு அமைப்புகளும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டன.

1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறைமையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத்திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தாய் நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்

5. உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பு+ரணமாக விடுவித்து, அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்

- இவையே ஒருங்கிணைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடுகள்.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 85)

இந்த ஐந்து கோட்பாடுகளில் ஒன்றிலிருந்தும் வழுவாமல் இன்று வரை விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இதே உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிற மூன்று குழுக்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுக்குழுக்களாக மாறியதை வரலாறு உணர்த்தியுள்ளது. ‘ஒன்றிணைவு’ குறித்து அதிகமாகப் பேசிய அனைத்து ஆயுதக் குழுக்களும் விடுதலைப் போருக்கு எதிரான முகாம்களில் பதுங்கியிருந்த படிதான் செயல்பட்டன.

ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் ஆசியோடு தமிழகத்தில் தங்கிக் கொண்டு, அனைத்துவிதச் சீரழிவுகளுக்கும் ஆட்பட்டு, புரட்சிகர வசனங்களைப் பத்திரிகைகளில் எழுதுவதன் வழி மட்டுமே தமது ‘விடுதலைப் போரை’ நடத்திக் கொண்டிருந்தன". விடுதலைப் புலிகள் இவர்களை, ‘காகிதப் புரட்சியாளர்கள்’ என்று அழைத்தனர். ஆனால், இந்த ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் செய்த ஒரே பரப்புரை, ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைய மறுக்கிறார்கள்’ என்பதுதான்!

ஆக, ‘ஒன்றிணைதல்’ என்ற சொல்லின் பின்னே அன்று முதல் இன்றுவரை ‘இந்திய ஏகாதிபத்தியத்தின் சதிகார முகம்’ ஒளிந்து கொண்டுள்ளது. கே.பியும், ‘நாம் தமிழர்’ அமைப்பும் வலியுறுத்தும் ‘ஒற்றுமை’க்கு என்ன கோட்பாட்டு நிபந்தனைகள் உள்ளன?

தனித் தமிழீழம் அமைய வேண்டும் - என்பதை இவ்விரு முகாம்களும் பேச்சளவில் ஒத்துக் கொள்கின்றன. ஆனால், அதைச் சாதிப்பதற்கான செயல்திட்டம் என்ன என்பதை ஆராயும் போதுதான் இவர்களின் சொல்லடுக்குகளுக்குப் பின்னால் உள்ள உண்மை முகங்கள் தெரிகின்றன.

இந்திய அரசோடு நல்லுறவு பேணிக் கொண்டு, தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, ச.ம.க, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, ராஜபக்சேயின் காலில் விழுந்தாவது அரசியல் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்து இராஜதந்திர வழியில் தனித் தமிழீழம் அமைக்கப் போகிறார்கள்!

இவ்வளவு ‘எளிய வழிகள்’ இருக்கும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 35 ஆண்டுகள் சமர் புரிந்தார்கள் என்று வியக்க வைக்கும் செயல்திட்டங்கள் ‘இவை’! எதிரிகளிடம் சரணடைந்து விடக்கோரும் திட்டம் இது. எல்லா சரணடைவுகளுக்கும் ‘ஒன்றிணைவு’ என்ற சொல்லே மூல மந்திரம்!

இதே போன்ற சூழலை முப்பது ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட தலைவர் பிரபாகரன் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘ஒற்றுமை என்ற உயரிய நோக்கினை மக்களை ஏமாற்றும் வெறும் பிரசார சாதனமாகக் கையாள்வது மிகவும் கீழ்த்தரமான அரசியற் சந்தர்ப்பவாதமாகும்’ (விடுதலைப் புலிகள் இதழ் - ஏப்ரல் 85)

ஒரு தேசிய இனத்தின் விடுதலையைக் கெஞ்சிப் பெற முயல்வது, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வாங்க நினைப்பது, போராட்டமே நடத்தாமல் அடைய முனைவது ஆகிய குணநலன்கள் கோழைத்தனத்தின் தன்னலத்தின் வெளிப்பாடுகள். 19/5க்குப் பிறகு மேலும் வீறு கொண்டு எழுந்து போராட வேண்டிய தமிழினம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

தமிழ்த்தேசிய அரசியலைக் களமாக முன்வைக்கும் த.தே.பொ.க., த.தே.வி.இ. உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் உரிமை என்றளவில் வீரியமாகச் செயல்படும் பெ.தி.க., தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுமே தமிழீழ விடுதலை அரசியலை மீண்டும் தமிழகத்தில் களமேற்றியுள்ளன. இவையே ‘அமைப்புகள்’ என்றளவில் தொடர்ந்து களத்தில் நிற்பவை. ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் வெற்றிகரமாக இயங்கும்போது அதற்கு ஆதரவாக வீரர்கள், கோழைகள் அனைவரும் குரல் எழுப்புவர். அவ்வியக்கம் சரிவைச் சந்திக்கும்போதுதான் எந்தக் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது, எது கரைந்து காணாமல் போகிறது என்பதை அறிய முடியும். வீரம் - கோழைத்தனம் ஆகிய இரண்டும் இரு இயல்புகள். ஒரு மனிதரின் கோழைத்தனம் குறித்து நாம் குறைபட இயலாது. ஆனால் தன்னலம் ஆபத்தானது. அது நல்லவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

‘சரணாகதி மதத்தவர் தம்மளவில் ஒதுங்கிக் கொண்டால், அது குறித்து நமக்கு விசனம் தேவையில்லை. அவர்கள் ராஜபக்சே, சோனியா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் கால்களில் விழுவதை நாமும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால், ‘ஒற்றுமை’ என்ற போர்வையில் இனவிடுதலைப் போராட்டத்தில் உள்ள அனைவரையும் காலில் விழ வைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தால், அது ஆபத்தானது.

"(எமது பாராளுமன்ற அரசியல்வாதிகள்) எமது மக்களது தேசியப் பிரச்சினையின் முழுவடிவத்தினையும் அதற்கான நிரந்தரத் தீர்வு என்ன என்பதையும் இந்திய அரசிடமோ சிங்கள அரசிடமோ உலகத்திற்கோ தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. தனியரசு தவிர்த்த சலுகைகள் பெறுவதற்காகவே இவர்கள் கொழும்புக்கும் டெல்லிக்கும் ராஜதந்திரக் காவடி எடுத்து வந்தனர். ஒரு தேசிய இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு தலைமை, அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையிலும் அதற்கான அரசியற் தீர்விலும் குழம்பி நின்று, ‘மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கட்டும்’ என்ற மதி நுட்பமற்ற தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்து வந்ததாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டது.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 84)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் சந்தித்துக் கெல்லி எறிந்த கருத்துதான் ‘சரணாகதி மதம்’ என்பது. நபர்கள் மாறியுள்ளனர். கருத்து ஒன்றுதான் - என்பதை மேற்கண்ட தலையங்க வரிகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. புலிகள் அடையாளம் காட்டிய ‘ராஜதந்திர காவடி’யைத் தமிழகத் தமிழ்த்தேசியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்தச் சூழல் மிகவும் சிக்கலானது. போராடிய இயக்கம் இன்று உறங்கு நிலையில் உள்ளது. தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு இனமே அல்லாடுகிறது. மூன்றரை இலட்சம் மக்கள் சொந்த மண்ணில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். எதிரிகளோ களியாட்டம் போடுகின்றனர். ஒட்டுக் குழுக்களின் பரப்புரைகளில் பிணம் தின்ற ஓநாய்களின் உற்சாக ஊளையைக் கேட்க முடிகிறது. எங்கும் வேதனை, சோகம், மன இறுக்கம், தவிப்பு, மனநோய்க்கு ஆளாகிவிடுவோமோ, மாரடைப்பு வந்து விடுமோ என்ற பதைப்பு!

ஆனால், இதுவும் ஒரு போராட்டச் சூழல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனவிடுதலைப் போர் நடக்கிறது என்பதன் அறிகுறிகள்தான் இவை. இத்தனை ஆண்டுகள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டுப் பழகினோம். இப்போது பின்னடைவுகளை ஏற்க இயலவில்லை. வெற்றியின் களிப்பில் பங்குபெற்ற நம் அனைவருக்கும் இந்தப் பின்னடைவைச் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

எந்தப் புலிகள் நம்மைப் புன்னகைக்க வைத்தார்களோ… அந்தப் புலிகள் முகங்களில் மீண்டும் புன்னகை பு+க்க வேண்டும். எந்தப் புலிகள் நமக்குத் ‘தமிழர்’ என்ற பெருமிதத்தை இறுமாப்பை மீட்டுத் தந்தார்களோ… அந்தப் புலிகள் மீண்டும் இறுமாப்படையச் செய்ய வேண்டும். இவையே போராடும் இனத்திற்குத் தேவையான குணங்கள்.

"சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானமிழந்து ‘தலைகுனிந்து’ வாழ வேண்டும். பயந்து பயந்து பதட்டத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இதழ் - மே 84)

இவையே தலைவர் பிரபாகரன் கடைபிடிக்கும் கோட்பாட்டு வரிகள். அவரோ, புலிகள் இயக்கமோ ஒரு போதும் ‘சரணாகதியை’ ஏற்றதில்லை. எதிரிகள் நமது இனத்தை அழிக்க முடிவு செய்துவிட்ட பிறகு, அவர்களிடம் சரணடைந்தாலும் மரணம்தான். திருப்பி அடித்தாலும் மரணம்தான். இவற்றில் இரண்டாவது வழியில்தான் விடுதலைக்கான வாய்ப்பு இருக்கிறது. வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறது.

‘சரணாகதி’ என்பது ஒரு இனத்தை அழித்தொழிக்கும் திட்டம் ஆகும். ‘சிங்களர்கள் கோபப்படும்படி எதுவும் செய்ய வேண்டாம்’ என்று தலைவர் கருணாநிதி கூறியதற்கும், கே.பி., ‘நாம் தமிழர்’ முன்வைக்கும் ‘ஒற்றுமை’ திட்டங்களுக்கும் பாரிய ‘ஒற்றுமை’ உள்ளது என்பதைக் கவனித்தால் நிலைமையை விளங்கி்க் கொள்ளலாம்.

‘சரணாகதி மதத்தவர்’ அனைவரும் எழுச்சி மிக்க வசனங்கள் பேசுகின்றனர். தலைவர் பிரபாகரன் குறித்து சிலாகிக்கின்றனர். இவையெல்லம், புரட்சிகர அடையாளங்கள் ஆகா. மாறாக, நடவடிக்கைகள் மட்டுமே அடையாளத்தைத் தீர்மானிக்கும். இயேசு ஒரு கலகக்காரராக வாழ்ந்தவர். மத நிறுவனங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜெருசலேம் நகருக்குத் தம் சீடர்களுடன் சென்ற இயேசு தேவாலயத்தின் முற்றத்தில் வணிகர்கள் கடைவிரித்திருந்ததைக் கண்டு துணுக்குற்றார். அவ்வணிகர்களை அங்கிருந்து விரட்டுகிறார். புறாக்களை விற்பவனிடமிருந்து அப்புறாக்களைப் பறித்துப் பறக்க விடுகிறார். அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தைப் பார்க்கும் மதபோதகர்களை நோக்கி, ‘இவ்விடம் வழிபாட்டுக்கான இல்லம் என்று எழுதப்பட்டுள்ளது. நீரோ இதை வழிப்பறிக்காரர்களின் குகை யாக்கிவிட்டீரே’ என்றார். (மத்தேயு 21:13) இது மட்டுமல்லாது, மதத் தலைவர்களையும், பிரசாரகர்களையும் இயேசு மிகக் கடுமையாகச் சாடினார். மத்தேயு அதிகாரம் 23 முழுவதும் மதகுருக்கள் மீதான இயேசுவின் கடுஞ்சொற்கள் நிறைந்தது.

இயேசு இறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டான்டின் என்ற ரோம அரசன் தனது வர்க்க நலன்களுக்காக, கிறித்துவத்தை ஒர் ஆதிக்க வர்க்க மதமாகக் கட்டமைத்தான். இன்று தேவாலயங்கள் வணிகமயமாகிவிட்டன. மொத்த வணிகமும் இயேசுவின் பெயரால் நடக்கிறது. ‘நீங்கள் ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள். பரலோகத்தில் இருப்பவரே உங்கள் பிதா’ என்றார் இயேசு. (மத்தேயு 23:9) இன்று கிறித்துவப் பாதிரியார்கள் அனைவரும் ‘பிதா’(Father) என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதுவும் இயேசுவின் முன்னிலையில்தான் நடக்கிறது. யு+த மதம் என்னென்ன பாவங்கள் செய்கிறது என்பதற்காக இயேசு ஒரு கலகக்காரராகப் போராடி கொல்லப்பட்டாரோ, அப்பாவங்களைக் காட்டிலும் அதிகமான பாவங்களை கிறித்துவம் புரிந்துவருகிறது - இயேசுவின் திருப்பெயரால்!

சமூக மாற்றத்திற்குப் போராடும் இயக்கம் சரியும்போது அதைச் சரிவிலிருந்து மீட்டு அதற்கு வலுவு+ட்டத் தவறினால், இதுபோன்ற விபரீதங்கள் தவிர்க்கவியலாதவை. இதே வழியில்தான் புலிகள் சரிந்த நிலையில், சரணாகதி மதத்தினர் புலிகளின் பெயராலெயே ‘ஆயுதப் போராட்டத்தை வன்முறை’ என்று அறிக்கை விடுகின்றனர். இதே போக்கில் சரணாகதி மதம் வளர்ந்தால், புலிகள் மீண்டு வருவதே இடர் நிறைந்ததாகி விடும். ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் இவர்கள் நமது போர்க்குணத்தை மழுங்கடித்து மண்டியிட்டு மனுப்போடப் பழக்கி விடுவார்கள்.

நமது மதிப்புக்குரிய இயக்குனர் சீமான் அவர்களும் "நாம் தமிழர்" பொதுக் கூட்டத்தில் ஜெகத் கஸ்பருடைய உரையின் சாரத்தை மறுத்துப் பேசவில்லை. மாறாக அவரும் இதே தொனியில் பேசினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இயக்குனர் சீமானை இந்த ஒரு பொதுக் கூட்டத்தின் பங்கேற்பைக் கொண்டு மதிப்பிட இயலாது. தமிழீழ விடுதலைக்காக அவர் புரிந்த ஈகங்கள் அதிகம். தமிழ் இளைஞர்களிடையே இனவுணர்வைத் தட்டியெழுப்பியதில் அவர் பங்கு அளப்பரியது. இயக்குனர் சீமான், தான் நிற்பது எதிர்ப் போராட்டக் களத்தில் என்பதை உணர வேண்டும். ‘ஒற்றுமை, சமரசம்’ ஆகியவை போராட்ட உத்திகள் என்று அவர் கருதினால் அது சரியல்ல. அவர் இந்நிலையபாட்டிலிருந்து மீள வேண்டும். அவர் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு அவர் உயிரினும் மேலாக மதிக்கும் தலைவர் பிரபாகரன் வெறுத்து ஒதுக்கிய நிலைப்பாடு என்பதை இக்கட்டுரையின் மேற்கோள் சான்றுகளே தெரிவிக்கும்.

"இறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழீழம் என்றோ ஒரு நாள் உதயமாவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வளம் கொழிப்பது திண்ணம். இந்நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறு நடை போடுவோமாக" - இவையும் தலைவர் பிரபாகரன் எழுதிய வரிகளே!


(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ், 2009 ஆகஸ்ட்டு)

தமிழ் ஈழப் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்


தமிழ் ஈழப் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக் கட்ட போரின்போது தனது தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நக்கீரனில் எழுதிய கட்டுரையிலிருந்து…

போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை.

இதோ பதில்:

மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது.

பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்:

“தினையான் குருவியை பார்த்திருக்கிறீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளிகளில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி… குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்… ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றியும், தன்னம்பிக்கையோடும் செய்யும்.

நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை

வைத்தேன்

வெந்து தணிந்தது காடு: -தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்

உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…”

இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார்.

“பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்கமாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சாதீர்கள்.

போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்…”, என்றாராம்.

நன்றி: நக்கீரன்

புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்


2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?

வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.

பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது)

பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும்.

புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.

பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா?

ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?

போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள்.

இப்படி எத்தனையோ வதந்திகள்!!

எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள்.

வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா?

இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா?

ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா?

சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா?

புலிகளின் ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா?

தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா?

அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா?

ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?

இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்?

இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன?

(தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)

மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்?

ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.

ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.

பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா?

பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன?

தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன?

பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?



சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான்.


இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார்.

நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன்.

மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,

அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர்.

சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது.


ஒன்று இராணுவத்துக்கு

இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு.

இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.

அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர் இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா?

அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான்.

இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன். [சிங்கள அரசின் இனப்படுகொலை]

Noel Nadesan (Australia)
Dr.Rajasingham Narendran (Middle East)
Mrs. Rajeswari Balasubramaniam (U.K)
Manoranjan Selliah (Canada)
Rajaratnam Sivanathan (Australia)

இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள்.

நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396.

இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video.

எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும்.

காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.

இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள். http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454

கிழக்கு முஸ்லீம்கள்

புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு.


புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது.

அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்.

இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு.

தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.

யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு.

இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.

பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

அது போல


ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை.

கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை.

ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.

கடைசியாக,

கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார்.

அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.

- டி.அருள் எழிலன்

தமிழீழத் தாகம் ஒரு போதும் தணியாது , யாருக்கும் பணியாது -காணொளி


தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?


விதியே, விதியே, தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?


என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

நூறாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலைசெய்யப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப் பட்டு சொல்லொண்ணாத சித்திர வதைகளுக்கு ஆளாகிவருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படைத் தேவை களும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள தமிழர்களை சிங்கள இராணுவம் மட்டுமல்ல இயற்கையும் கொடுமைக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந் திருக்கிறது. கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக் கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தை கள் உட்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ள வர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத் திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முகாமிலுள்ள மக்களைப் பராமரிக் கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக் காத நிலையிலும் அவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், சமையல் பாத் திரங்கள் போன்றவற்றை அய்.நா. அகதி கள் அமைப்பு (மசஐஈத) வழங்கிவரு கிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக் கும் தேவையான உணவுப் பொருட்கள் அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த அமைப்பே அந்த உதவியை மக் களிடம் நேரடியாக வழங்குவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்கவில்லை. இராணுவம் மூலம் மட்டுமே எந்த உத வியும் அளிக்கப்படவேண்டும் என பிடி வாதமாக கூறுகிறது. ஆனாலும் அவர் களும் அதைச் சரிவரச் செய்வதில்லை.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்து 25,000க்கு மேற்பட்ட இளைஞர்களை தனியாகப் பிரித்து அவர் களுக்கு புலிகள் என்று முத்திரையிட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர்.

3000க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தினரி டமிருந்து பிரித்து இராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அவர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங் களையும் சிங்கள அரசு அனுமதிக் காததை சர்வதேச பொது மன்னிப்புச் சபை மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது.

மற்றொரு கடுமையான குற்றச் சாட்டினையும் சர்வதேச பொது மன்னிப் புச் சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததை காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங் கள இராணுவம் தாக்குதலைத் தீவிரப் படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங் களில் இடுகாடு எதுவும் காணப்பட வில்லை என்றும் ஆனால் போர் முடி வடைந்த பிறகு மே 24ஆம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஒவ்வொரு சவக்குழியிலும் நூற் றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை மிகக்கடுமையான குற்றச்சாட்டினை கூறியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது இட்லரின் நாஜிப்படையினர் யூத இன மக்களைக் கொடூரமாக கொன்றுகுவித்த செய்திகள் உலகையே அதிரவைத்தன. ஆனால் அதையும் விஞ்சும் அளவுக்கு இராசபக்சேயின் இராணுவம் தமிழர் களுக்கு எதிரான அட்டூழியங்களை எவ் விதமான தங்குதடையின்றி நிறை வேற்றிக்கொண்டுள்ளது.

அய்.நா.பேரவையோ அல்லது இந்தியா உள்பட உலக நாடுகளோ இந் தக் கொடுமைகளை தடுத்து நிறுத்தவும் குறைந்த பட்சம் ஏன் என்று கேட்கவும் கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத் திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்?

வாழையடி வாழையாக தாங்கள் வாழ்ந்துவந்த பாரம்பரியமான ஊர் களையும் வீடுகளையும் துறந்து மக்கள் வெளியேறவேண்டிய அவசியம் எப் போது நேர்கிறது? கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை, சிறைக்கொடுமை, சுற்றிவளைக்கப்படுதல் போன்ற மிரட்டல்கள் உருவாகும்போது மக்கள் தங்கள் மண்ணில் இருந்து ஏதிலிகளாக வெளியேறுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவா னார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த அய்.நா. பேரவை அய்.நா அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதென முடிவு செய்தது. அப்படி உருவாக்கப் பட்ட அமைப்புதான் மசஐஈத ஆகும். 1951ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி யன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட் டில் அகதிகள் உருவானாலும் அவர்களு டைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட் டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட் டன. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகமுழுவதிலும் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அந்நிய நாடு களுக்கு இடம் பெயர்ந்த 70க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 145 இலட்சமாகும். உள்நாட் டிலேயே அகதிகளாக தவிப்பவர்களின் எண்ணிக்கை 54 இலட்சமாகும். அய்.நா. அகதிகள் ஆணையம் தலையிட்டதின் பேரில் அதன் துணையோடு சொந்த வீடுகளுக்கு திரும்பிய அகதிகளின் எண் ணிக்கை 40 இலட்சமாகும். அகதிகள் என்ற தகுதி வழங்கப்படாமல் அய்.நா. வின் பாதுகாப்பில் உள்ள அகதிகள் எண்ணிக்கை 35 இலட்சமாகும்.

இப்படி உலகமுழுவதிலுமுள்ள பல்வேறு நாடு களைச் சேர்ந்த அகதிகளை அய்.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே அய்.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்சினை யில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.

ஆசியாவில், கம்போடியா, மியான் மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் களின் விளைவாக ஏராளமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1948ஆம் ஆண்டு அய்.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப்பிரகடனம் மிக மிக முக்கியமானதாகும். மனித உரிமை களிலிருந்து அகதிகள் பாதுகாப்பு என்பதை பிரிக்க முடியாது.சொந்த நாட் டில் வாழ இயலாத நிலையில் அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அடைக்கலம் புகுந்த நாட் டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஆனால் அய்.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் அகதிகளை அய்நா. பிர கடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளையும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபேத் அகதிகள் சுதந்திரமாக நடமாட வும் சொந்தமாக தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அந்நிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளை வாக இந்தியாவில் அவர்களின் குடியிருப் புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங் கள், மருத்துவமனைகள் போன்றவை சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.

அதைப்போல இந்தியாவிற்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னைத் தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடு களும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல் லாவற்றிற்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் குடி யேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப் பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கை யில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் திபேத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க தேச அகதிகள் 5,35,000 பேர்களும் இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உட்பட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உட்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந் திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் களுக்காக அரசாங்கம் கட்டித்தந்த குடி யிருப்புகள் காலப்போக்கில் சிதிலமாகி விட்டது. அவர்களுடைய குழந்தை களுக்கு பள்ளிகள் கிடையாது. மருத்துவ மனைகள் கிடையாது. மொத்தத்தில் வேண்டாத விருந்தாளிகளாக அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள்.

1965ஆம் ஆண்டு சிறீமாவோ- சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்தமான் தீவில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்கவேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துக்கட்சி குழு டில்லி சென்று பிரதமர் இந்திராவை சந்தித்து வலியுறுத்தியது. ஆனால்அந்தக் கோரிக்கை இன்று வரையிலும் நிறைவேற்றப்பட வில்லை.

1983ஆம் ஆண்டிலிருந்து சிங் கள இராணுவ வெறியர்களின் தாக்குதல் களுக்குத் தப்பி படகுகள் மூலம் தமிழ கத்திற்கு தப்பி ஓடிவரும் ஈழத் தமிழர் களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்தித் சுடுகிறது. அதில் தப்பி இராமே சுவரம் வந்து சேரும் அகதிகளை தமிழ கப் போலிசும் இந்திய அரசின் உளவுத் துறையும் மிகக்கடுமையான விசார ணைக்கு உட்படுத்துகின்றனர். போராளி கள் என சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருப்பவர்கள் சொல்லமுடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத் தின் பேரில் ஆண்டுக் கணக்கில் விசா ரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்கு பொருட்களை கடத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்றபிறகும் கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும் அரசு அவர்களை விடு தலை செய்ய மறுக்கிறது. சட்ட விரோத மான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து தாங்கள் கொடுமைப் படுத்தப்படுவதை எதிர்த்து சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற் கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சைபெற்றிருந்தவர்களை தமி ழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமி ஷனிடம் நான் புகார் செய்தபோது கமிஷனின் தலைவராக இருந்த நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களே வேலூர் சிறப்பு முகாமிற்கு வந்து நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலைசெய்யும் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.

இந்தியாவில் 25 ஆண்டு காலத் திற்கு மேலாக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடி யேறியோர் அந்தஸ்து வழங்கவேண்டு மென வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த குரு இரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதன்முதலாக இத்தகைய கோரிக்கையை துறவுக்கோலம் பூண்ட ஒருவர் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக் கது மட்டுமல்ல பாராட்டத்தக்கதுமாகும்.

இலங்கையில் மின்வேலி முகா மிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 இலட் சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை உட னடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாக பதில் கூறுகிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக முகாம்களில் ஈழத்தமிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும் போது நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள்.

கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டு காலத்தில் குடியுரிமையே வழங்கப் படுகிறது. வேறுபல அய்ரோப்பிய நாடு களிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. இங் கெல்லாம் வாழுகிற ஈழத்தமிழ் அகதிகள் சொந்தமாக தொழில் செய்யவும், வணிகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய குழந்தைகள், அந்தந்த நாடுகளின் பள்ளிகளில் சேர்ந்து பயிலு கிறார்கள். அந்தந்த பள்ளிக்கூடங் களிலேயே அவர்கள் தமிழைக் கற்கவும் அந்த அரசுகள் வசதிசெய்து கொடுத் துள்ளன. அந்நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களும் மருத்துவ உதவிபெறு கிறார்கள். ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய மனித நேய உதவிகள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவின் பாராமுகத்திற்குரிய காரணம் நமக்கு புரிகிறது. ஆனால் அய்.நா.வும் மற்றும் உள்ள உலக அமைப்புகளும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து ஏன் தவறினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல இலட்சம் தமிழர்கள் பதைக் கப் பதைக்க படுகொலை செய்யப்படு வதை தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு ஆனால் உலகம் ஏன் தவறிற்று? குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன்? இந்த கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங் களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன.

1991ஆம் ஆண்டில் ஈராக்கின் வடபகுதியிலிருந்து 15 இலட்சம் குர்தீஷ் இன மக்கள் ஈராக்கிய இராணுவத்தினரால் சுற்றிவளைத்துக்கொள்ளப்பட்டபோது 5-4-1991இல் அய்.நா. பாதுகாப்பு குழு கூடி குர்தீஷ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வதேச அமைதிக்கும் பாது காப்பிற்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப் பாற்றுவதற்கு எல்லாவகையான உதவியும் செய்யவேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. மேலும் அய்.நா. பட்டயத் தின் ஏழாவது பிரிவு கூறியுள்ளபடி குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசிய மாகும் என்றும் அதற்காக வான், கடல், நில வழியாக படைகள் உடனடியாக அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவவேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்திற்று. இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திதான் அமெ ரிக்கா தனது படைகளை ஈராக்குக்கு விரைந்து அனுப்பியது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களை பராமரிக்கும் பொறுப்பு அய்.நா.அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைப்போல முன்னாள் யுகோஸ் லேவியாவில் இணைந்திருந்த போஸ்னி யோவைச் சேர்ந்த சரஜிவோ நகரில் சிக் கிக்கொண்ட ஐந்து இலட்சம் மக்களைப் பாதுகாக்க அய்.நா. பாதுகாப்பு படையை அனுப்புவது என பாதுகாப்புக் குழு முடிவு செய்தது. அதேபோல குரோஷி யாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் அய்.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். போஸ்னியோ நாட்டில் பல்வேறு பகுதி களில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருட்களை வீசி அவர்களைப் பாதுகாக்கும் கடமை யையும் அய்.நா. செய்தது. இந்தப் பணி யில் கனடா, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன் அமெரிக்கா உட்பட 20க்கு மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் பல பகுதிகளில் இவ்வா றெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட அய்.நா.வும். மேற்கு நாடுகளும் இலங்கை யில் சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே ஏன்?

மேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா? அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்கு காரணமா?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உல கிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர் கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித் தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப் படி உலகம் முழுவதும் மனித குலத் திற்குச் சொந்தமானது.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கை யில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர் களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.

இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.

- பழ. நெடுமாறன்-

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA