Monday 24 August 2009

தமிழ் மக்களுடைய உண்மையான அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது அரசினால் மாத்திரமல்ல, தமிழ் இயக்கங்களாலும்

யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? என்னும் தலைப்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட கருத்தரங்கில் புளொட் தலைவர் உரை… கலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்றுமாலை 4.30முதல் 7மணிவரை நடைபெற்றது. மேற்படி கருத்தரங்கில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் பேராசிரியருமான அமைச்சர் திஸ்ஸ விதாரண, கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி ரவீந்திரகுமார், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீடத் தலைவர் கலாநிதி கீத பொன்கலன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.எம். நௌசாட், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளருமான கந்தையா நீலகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,..

என்.எம்.பெரேரா ஞாபகார்த்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அவருடைய மருமகனான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பினையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பில் மக்களுடன் நேரடியாக தொடர்பாடக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
1956ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது இரு மொழிகளென்றால் ஒருநாடு, ஒரு மொழியென்றால் இருநாடு என்று திரு.கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் பாராளுமன்றத்திலேயே கூறியிருந்தார். அதேபோல 1961ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்துவேன் என்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் கங்கணங்கட்டி வடகிழக்கிலே சிங்கள அதிகாரிகளை அனுப்பியபோது அங்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் வீ.பொன்னம்பலம், சமசமாஜக்கட்சியின் நாகலிங்கம் போன்ற இடதுசாரிகள் பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். இப்போராட்டத்தின்மூலம் தமிழ் மக்கள் தம்முடைய எதிர்ப்பினை பலமாக காட்டியதால் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கில் அரச நிர்வாகம் முற்றாக முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த போராட்டம் ஆயுத பலத்தால் நசுக்கப்பட்டது. அதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வேண்டி எடுக்கப்பட்ட போராட்டங்கள் அனைத்துமே அரசினால் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்ட போது ஆயுதத்தை ஆயுதத்தால்த் தான் சந்திக்க வேண்டுமென்று இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலே குதித்தார்கள்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது பல இயக்கங்கள் அங்கு உருவாகிய போதிலும், இறுதியாக நான்கு ஐந்து இயக்கங்கள் பலம்பொருந்திய இயக்கங்களாக உருவாகின. இருந்தாலும் தமிழ் மக்களின் சாபக்கேடு போல, அந்த இயக்கங்களிடையே நடந்த மோதல்கள் அல்லது புலிகள் அமைப்பு தாங்களே தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக அனைத்து இயக்கங்களையும் பலமிழக்கச் செய்து தாங்கள் பலம்பொருந்திய இயக்கமாக உருவாகியது. இதில் ஒரு இயக்கத்தை மட்டும் குறைகூறுவதல்ல எனது நோக்கம். நிச்சயமாக பிழைகளிலேயே அனைவருக்கும் பங்கிருக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிவோம். இயக்கங்களுக்கிடையே இந்தப் பங்கிலே கூடக்குறைய இருக்கலாம். இவைகளை இன்று தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனத்தையும் நாம் அடைந்துவிட முடியாது.
இந்தவருடம் மே மாதம் 17ம் 18ம் திகதிகளில் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். புலிகளின் மரபுரீதியான ஆயுதப் போராட்டம் முற்றாக தோற்கடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்மக்கள் மத்தியில் தாம் ஒரு தோற்கடிக்கப்பட்ட இனம் அல்லது கைப்பற்றப்பட்ட இனம் என்ற மனப்பான்மை உருவாவதை நாம் காணக்கூடியதாக இருந்தது. புலிகள் ஏகப் பிரதிநிதிகளாக இருந்த காரணத்தினால், அவர்கள் விட்ட பிழைகளால் உலக நாடுகள் அவர்களைப் பயங்கரவாதிகளாக தடைசெய்ய, அவர்களது போராட்டமும் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கு அரசுக்கு இலவாகி விட்டிருந்தது. இதனை ஒரு பயங்கரவாதப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டுள்ளதென்பதாக உலகிற்கு எடுத்துக்கூற அரசினால் முடிந்தது.
தமிழ் மக்களுடைய உண்மையான அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது அரசினால் மாத்திரமல்ல எங்களாலும்கூட என்பதுடன் தமிழ் மக்கள்கூட அதற்கு நிச்சயமாக ஒரு பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர் என்றே நான் நம்புகின்றேன். எனவே, இன்று நடக்க வேண்டிய விடயம் என்ன என்பதே இங்கு முக்கிய விடயமாகும்.
ஒன்று இடம்பெயர்ந்த 3லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது இடைக்கால மழை ஆரம்பித்தபோது அந்தப் பகுதிகளுக்கு நாம் சென்று பார்த்தோம். வெள்ளத்தில் சிக்கி கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டும், கிழிந்த நிலையிலும் உள்ளன. மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த முகாம் பகுதியானது சேற்றுப் பகுதியாகும். சிறிய மழை பெய்தாலும் கூட அது சேற்றுப்பூமியாக மாறிவிடும். அந்த மக்கள் அங்கு வாழமுடியாது. நித்திரையில்லாமல், சமைத்து உண்ண முடியாமல் தங்கள் குழந்தைகளை இடுப்பில் சுமந்தவண்ணம் அந்த மக்கள் படும் வேதனைகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. உண்மையிலேயே அதைப் பார்க்கின்ற போது தமிழ்மக்கள் போல் இந்த உலகத்தில் வேறெங்கும் ஒரு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இவ்வளவு அவலத்திற்கு முகம் கொடுத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
இலட்சக்கணக்கான மக்கள் 24மணிநேரம் உணவின்றி சமைக்க வழியின்றி நிற்க வழியின்றி அங்கு வெள்ளம் உள்ள பகுதிகளைவிட்டு ஏதாவது ஒரு தண்ணீர் இல்லாத பிட்டி அகப்படுகின்றதா என்று தேடும்நிலை அங்கிருக்கிறது. நோய்தொற்று அபாயமும் அங்கு பாரிய அளவில் நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்றவேண்டும். இந்த மக்கள் தங்களது சொந்த கால்களில் நிற்கும் வகையில் மீண்டும் இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களிலே குடியேற்றப்பட வேண்டும். இதுதான் இன்று எங்கள் அனைவருக்கும் முன் இருக்கின்ற முதலாவது கடமையாகும் என்று நான் நம்புகிறேன்.
இந்த கடமையை செய்வதற்கு கட்சிக்கு அப்பால், கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தமிழ் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ்மக்களின் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதனைத் தீர்க்க வேண்டுமென்று அக்கறைப்படுகின்ற இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமைப்பாட்டை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்குவதன் மூலமே இவ்விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
அரசாங்கம் இந்த மக்களை மீளக்குடியமர்த்த தயங்குகின்றது. அங்குள்ள வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. அங்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளன. ஆகவேதான் அப்பகுதிகளில் உடனடியாக மீள்குடியமர்த்த முடியாதென்று கூறுகின்றனர். ஆனால் அங்கிருக்கின்ற மக்களில் சுமார் 40ஆயிரம் மக்கள் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். மிகப் பெரும்பான்மையான மக்கள் மட்டக்களப்பு, திருமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்னும் ஒரு பகுதியினர் மன்னார், வவுனியாவைச் சேர்ந்தவர்கள். வன்னிக்கு வௌ;வேறு விடயங்களுக்காக சென்றவர்கள் யுத்தம் ஆரம்பித்து பாதை அடைப்பட்டவுடன் அங்கு தங்கியிருந்தவர்கள். இவர்களையெல்லாம் அனுப்புவதில் எந்தவித கஸ்டமும் இருக்கமுடியாது.
இவர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இப்படியானவர்களை அனுப்பினால் கூட ஏறக்குறைய அரைவாசிப் பேர்வரையில் அந்த முகாம்களில் குறைந்து விடுவார்கள். அதையும் அவர்கள் செய்வதற்கு தயங்குகின்றனர்.
நான் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் கதைத்த போது, உடனடியாக யாழ். மக்களை அனுப்புவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி எம் முன்னே அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். இங்கிருந்து உத்தரவுகள் சென்றாலும் அங்கு சில விடயங்கள் நடப்பதைக் காணவில்லை. முகாம்களுக்குள் புலிகள் சிலர் இருப்பதாக அவர்கள் எம்மிடம் சுட்டிக் காட்டிய போது, ஒரு சிறுதொகை புலிகள் முகாம்களுக்குள் இருப்பதால் இலட்சக்கணக்கான மக்களை தண்டிக்க முடியுமா? இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். எனவே இம்மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு எங்கள் கட்சிகள் மத்தியிலே ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
1970ல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் 1983ல் உச்சம் பெற்றது. 1983களில் நாம் இருந்த நிலைமையைப் பாருங்கள். இன்றிருக்கின்ற நிலையைப் பாருங்கள். இன்று வடபகுதியைச் சேர்ந்த 40சத வீதமான மக்கள் கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தது என்ன செய்வதென்ற நிலையிலுள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு வருவதென்றால் பாதுகாப்பமைச்சின் அனுமதி தேவை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதென்றால் பாதுகாப்பமைச்சின் அனுமதி தேவை. இப்படியாக 1983களில் நாங்கள் இருந்ததைக் காட்டிலும் ஆகக் குறைந்தது ஒரு ஐம்பது வருடங்கள் பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கிப் போயுள்ளோம். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ஆயுதப் போராட்டம் பிழையென்று நான் சொல்ல வரவில்லை. அதனை முன்னெடுத்துச் சென்ற விதமே பிழை. மக்களை மாக்களாகப் பாவித்து ஒரு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியதற்கு நிச்சயமாக நாங்களும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றோம்.
இவ்விடயத்தில் அரசுகள்மீது மட்டும் பழியைப் போட்டுவிட முடியாது. சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வந்தார்கள். ஆனால் அவற்றை வென்றெடுக்கவென போராட்டம் ஆரம்பித்த நாங்கள், இயக்கங்கள், தமிழ் மக்களுடைய உரிமைகளை, சுதந்திரத்தை ஏறக்கறைய முற்று முழுதாகவே பறித்தோம். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனைக் கூறுவதற்கு எந்தவித தயக்கமும் எமது கட்சியிடம் இல்லை. இதனைக் கண்ணாலேயே பார்த்திருக்கிறோம். இந்த பிழைகளின் விகிதாசாரத்தில் இயக்கங்களிடையே வித்தியாசம் இருக்கலாம். புலிகள் எண்பதுவீதம் பிழைகள் செய்திருக்கலாம் மிகுதி இருபது வீதம் பிழைகள் மற்றைய இயக்கங்களிலுமுள்ளது.
தமிழ்க்கூட்டமைப்பினர் கூறுகின்றனர் தங்கள் கைகளில் இரத்தமில்லை என்று, ஆனால் அவர்களுக்கும் இதில் பங்கிருக்குதென்பது இங்கிருக்கிருக்கக் கூடியவர்கள் பலருக்கும் தெரியும். அன்று இவர்கள் மேடையில் பேசிய பேச்சுக்களைக் கேட்டால் இது நன்றாகப் புரியும். அனைவருக்குமே அதில் பங்கிருக்கிறது என்பதே உண்மையாகும். இதனை விடுத்து இனி எம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை மீண்டும் வாழவைக்க வேண்டும் என்பதே அது.
ஒன்று அகதி முகாமில் அல்லல்படுகின்ற மக்களை மீள்குடியேற்ற வேண்டும், அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இரண்டாவது தமிழ்மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க வேண்டும், அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் என்று கூறுகின்றபோது தமிழ்கட்சிகள் மாத்திரமல்ல. எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கக்கூடிய கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நிச்சயமாக ஒன்றுபட வேண்டும். கிழக்கைப் பொறுத்த மட்டில் முஸ்லிம் மக்களைப் புறக்கணித்து விட்டு அங்கு ஒரு தீர்வுகாண முடியாதென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒற்றுமை என்று சொல்லும் போது நீங்கள் நினைத்துவிடக் கூடாது 1985ல் வெளிச்சக்திகளால் உருவாக்கப்பட்ட ஈ.என்.எல்.எவ் போன்ற ஒற்றுமை என்று. திம்புக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லும் நிலையே அங்கு ஏற்பட்டது. தேர்தலுக்காக ஒரு கூட்டு அல்லது புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லுவதற்காக ஒரு கூட்டு. இவ்வாறான கூட்டினை நான் சொல்லவில்லை. ஏனெனில் நிச்சயமாக தேர்தலுக்காக ஒரு கூட்டு என்றுமே தமிழ்மக்களுக்கு உதவியது கிடையாது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதற்கு தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு, இன்று தமிழ்மக்கள் படுகின்ற இன்னல்களை தீர்ப்பதற்கான ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர முடியாவிட்டாலும் ஒரு கருத்தொருமைப்பாடு என்ற அடிப்படையிலேயே ஒற்றுமை வருமென்றால் நிச்சயமாக பல விடயங்களை தீர்த்துக் கொள்ள முடியும். இதனை அனைத்துக் கட்சிகளும் நினைவிற் கொள்ள வேண்டும்.
அனைத்து கட்சிகளுமே அடிப்படை விடயத்தில் அதாவது, தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற இன்னல்களை தீர்ப்பதிலும், இம்மக்களை மீள்குடியேற்றுவதிலும், இவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் தங்கள் காரியங்களைச் செய்து கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதிலும் எங்களாலான அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இது ஒரு தனிக்கட்சியோ தனிநபரே செய்யும் விடயமல்ல. ஆகவே இன்று கட்சிகளைப் பொறுத்தமட்டில் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றோம். ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததும் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. நாம் தோற்று விட்டோம் அடுத்தது என்ன என்ற ஏக்கமுடனேயே தமிழ்மக்கள் உள்ளனர்.
எனவே இதற்கு உடனடியாக நாம் ஒன்றுமைப்பட்டு மக்களின் அவலநிலையைப் போக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டும். இனியொரு ஆயுதப்போராட்டம் நிச்சயமாக நாம் பார்க்கக்கூடிய காலத்திற்குள் நடக்கக்கூடிய காரியமல்ல. ஆகவே எங்களைப் பொறுத்தமட்டில் முற்றுமுழுதாக இனியொரு ஆயுதப் போராட்டம் நாட்டில் வரக்கூடாதென்பதில் மிகவும் அக்கறையாக உள்ளோம். ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தால் நாங்கள் அடைந்த நன்மைகளைக் காட்டிலும் அழிவுகளே அதிகமென்பதை பார்த்திருக்கிறோம். தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு எழுச்சியையோ அல்லது கோசங்களையோ எழுப்பி வீதிகளில் இறக்கி போராடி மக்களை நாங்கள் நேரடியாக ஆபத்துக்குள் தள்ளிவிட விரும்பவில்லை.
தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறை கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகள் என்பனவற்றின் கருத்தொருமைப் பாட்டுடான முன்னெடுப்புகள் தற்போது அவசியமாகின்றது. எமது மக்களின் பிரச்சினை தொடர்பில் விளங்கிக்கொண்டு அதற்கு ஆதரவுக் குரல்கொடுக்கும் இடதுசாரி கட்சிகள் மற்றும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொண்டுள்ள தென்னிலங்கை சக்திகள் ஆகியவற்றுடன் ஐக்கியப்பட்டு பணியாற்றவே விரும்புகின்றோமென்பதுடன் இதன்மூலமே அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்றும் நிச்சயமாக நம்புகின்றோம் என்றார்.

பிரசுரிக்கப்படாத புலிகளின் புகைப்படங்கள்


நல்லூரில் தீர்த்தமாகிய வன்னி வறிய மக்களின் குருதி

நேற்றுவரை தமிழ்மக்களின் இரத்தம் குடித்த சிங்கள விமானங்கள் இன்று நல்லைக் கந்தன் திருவிழவில் பூத்தூவுகின்றது. இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் தினம் நோயாலும் சித்திரவதைகளாலும் மடிந்தவண்ணம் உள்ளனர். சரணடைந்த பல்லாயிரம் போராளிகள் பட்ணிபோடப்பட்டு நோய்களுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டு தினம் பத்து பதினைந்து என்று சாகடிக்கப்படுகின்றனர். இரகசியமாக கொல்லப்படுகின்றவர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. தப்பியோடி காடுகளில் மறைந்த போராளிகள் உணவின்றி பரிதவித்து மடிகின்றனர். இவை எல்லாம் ஈழத்தில் ஒரே நேரத்தில் நடந்தேறும் நிகழ்வுகள்.

அனைத்தும் இலங்கை இந்திய அரசின் ஜனநாயகத்துள் அடங்குகின்றது. இவைகளே இந்த நாடுகளின் ஜனநாயகம். சிங்கள அரசு செய்யும் தமிழ்மக்கள் மீதான அனைத்து கொடுமைகளுக்கும் குடைபிடிப்பது ஒன்றுதான் இந்திய அரசுக்கு தற்போதுள்ள வழி. மேலும் மீள்குடியேற்றங்களை தடுத்துநிறுத்தும்படியான ஆலோசனைகளும் சரணடைந்த போராளிகளை கொல்லும் வழிவகைளையும் போதிப்பதும் இந்திய அரசின் உள்ளக நடவடிக்கையாக இருக்கின்றது. புலிகள் இருக்கும் வரை புலிகளை சாட்டி இலங்கைக்குள் மூக்கை நுளைத்த இந்திய அதிகாரவர்க்கம் இப்போது எஞ்சி தமிழர்களை நசுக்குவதில் சிங்கள அரசுடன் கைகோர்ப்பது ஒன்றே இலங்கைக்குள் மூக்கை நுளைப்பதற்கான வழி. அனைத்து கொடுமைகளையும் இலங்கை அரசுடன் சேர்ந்து செய்வதற்கும் அவற்றை சர்வதேசத்தின் முன்னால் இலங்கை அரசு நியாயப்படுத்த இந்தியா பக்கபலமாக இருப்பதுமே இலங்கை இந்திய உறவுக்கான இறுதிப்பாலமும் இலங்கைக்குள் தொடர்ச்சியாக மூக்கை நுளைப்பதற்கான வழியும் ஆகின்றது.

இங்கே ஆதிக்க வர்க்கம் தமது தேவைகளை நெழிவுசுழிவுகள் ஊடாகவும் சூழ்ச்சிகள் ஊடாகவும் நகர்த்துகின்றது. படிப்படியாக வடிகட்டப்பட்ட அடிமட்ட வறிய மக்களின் வாழ்வே துவசம் செய்யப்படுகின்றது. வவுனியாக தடுப்புமுகாம்களில் உறிஞ்சி எடுக்கப்பட்ட வறிய மக்களின் குருதி யாழ் நல்லைக் கந்தன் திருவிழாவில் பூவாகத் தூவப்படுகின்றது. இதன் மூலம் சர்வதேசத்துக்கு நாட்டின் அமைதியும் சந்தோசமுமான வாழ்வு காட்சிப்படுத்தப்படுகின்றது.

பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரால் உலகெங்கும் நிறுவப்படும் ஜனநாயகச் சுவர்கள் மனித சதைகளாலும் எலும்புகளாலும் உருவாக்கப்படுகின்றது. பின்னர் வெள்ளை வண்ணம் பூசி ஜனநாயகம் என்று எழுதப்படுகின்றது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கு அவலமே விதியாகின்றது. மீட்சி என்பதுக்கு எந்த நம்பிக்கை தரும் விசயமும் இல்லை. அவர்களால் இனி மீள்வது என்பதும் இயல்பான வாழ்வுக்கு திரும்புவதென்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லை. அவர்கள் குரவளையை அனைத்து ஆதிக்க சக்திகளும் நெரிக்கின்றது.

வன்னி பெருநிலப்பரப்பு வறிய மக்கள் ஆடுகளாக இழுத்துவரப்பட்டு கோயில் பலிபீடங்களில் தமிழ்சிங்கள முதலாளிகளால் பலியிடப்படுகின்றார்கள். ஐயோ என்ற வவுனியா முகாம்களின் ஓலமும் அரோகரா என்ற யாழ் நல்லூர் கந்தன் திருவிழாச் சத்தங்களும் ஒன்றாக ஈழத்தில் இருந்து எழுகின்றது. வறிய மக்களின் குரல் அமைதியாகின்றது. பசியோடும் பட்டிணியோடும் சக்தியில்லாத சீவன்களால் சத்தமாக அழ முடியாது. அதை காதுகுடுத்து கேட்பதற்கு தமிழர்கள் உட்பட உலகில் யாரும் இல்லை.

இந்த மக்கள் வாழ்வு துவசம் செய்யப்படுவதில் ஏனைய மக்களின் பங்கு சிங்களத்திற்கு நிகராக உள்ளது. போராட்டத்தில் இருந்து நழுவிய தமிழ்மக்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற தீராத அவா இந்த மக்களை மிகவும் நசுக்க காரணமானது. தமிழீழக் கனவை அடைய இந்த மக்களை போராட்டம் நிர்ப்பந்தித்தது. போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் இன்று சிங்களத்துடன் ஒட்டியிருக்கலாம், சம்மந்தம் இன்றி இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவனின் சுதந்திரம் என்ற விருப்பும் அதன் நிமிர்த்தம் அவனுடைய எதிர்பார்ப்புக்களும் இந்த மக்களின் அவலத்துக்கு காரணமாகின்றது என்பது மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவனாலும் உணரப்படும்.

தமிழக மக்களை எதிர்பார்ப்பதோ அங்கிருக்கும் அரசியல் தலமைகளை எதிர்பார்ப்பதோ எதுவிதத்திலும் வதைபடும் மக்களுக்கு உதவமாட்டாது. அவர்களது அனைத்தும் இந்தியன் என்பதில் அமிழ்ந்து போகின்றது. அதிலிருந்து அவர்களால் எழுந்து வர முடியாது. ஈழமக்களின் சதைகளிலும் குருதியிலும் அரசியல் நடத்திப்பழகியவர்கள் என்னும் கொஞ்சம் வதைமுகாம் மக்களைப்பற்றி பேசி அரசியல் செய்யலாம். அதைவிட அங்கிருந்து எதுவும் இல்லை. ஒரு இந்தியனால் மனிதாபிமானம் பேச முடியாது. தமிழக தமிழன் இந்தியனில் இருந்து வெளியில் வர முடியாது. இதற்கு மேல் அவர்களைப்பற்றி பேச எதுவும் இல்லை.


கடமையை செய் பலனை எதிர்பாராதே, கடவுள் நம்பிக்கை உள்ளவன் பாவங்களுக்கு பரிகாரம் செய், மோட்சத்தை நம்புகின்றவன் புண்ணியத்தை செய், இது அனைத்துக்கும் பொருத்தமானதே வதைமுகாம் மக்களுக்காக குரல் கொடுப்பது. இந்த உலகத்தின் ஜனநாயகம் குறித்து நாம் போதியளவு புரிந்தாகிவிட்டது. அதனுடன் மல்லுக்கட்டி எமக்கு எந்த ஒரு துரும்பும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், எமது மக்களின் வதைகளை ஜனநாயகச் சுவர்களில் எழுதிக்கொண்டிருப்போம். பலனில்லாமல் காரியத்தை செய்ய முனைவது பயித்தியக்காரத்தனம் என்பதற்கு அப்பால் நாம் மனுசர்களாக எம்மை மீட்டுக்கொள்வதற்கு இதை விட வேறு வழியில்லை.

யுத்தத்தின் இறுதிக்கட்ட நாட்களில் நடந்தேறிய அவலங்களுக்காக வீதிகளில் இறங்கிய போது மனுசத்தனம் இனத்தின் மீதான பாசமாக வெளிப்பட்டது. இன்றும் வெடிச்சத்தங்கள் இல்லாமல் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. பரபரப்பில்லாமல் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. நேற்றும் இன்றும் நாளையும் நாங்கள் வெற்றி தோல்விக்கு அப்பால் மனுசத்தனத்துடன் இருப்போம்.

புலிப்பயங்கரவாதிகளின் மனிதக்கேடயங்கள் பயங்கரவாதிகள் ஆகியது எப்படி?

வணக்கம்,

புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது.

இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது.

மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்கள் இப்போது சிறீ லங்கா அரசின் கூற்றின்படி அவர்கள் விடுவிக்கப்பட்டபின்னர் பயங்கரவாதிகளாக ஆகியது எப்படி??

புலிகள் அணு ஆயுதக் கொள்வனவில் ஈடுபடிருந்ததாகச் சித்தரிக்கும்


விடுதலைப் புலிகள் அணு ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய இருந்ததாகவும், அதனைப் பாவிக்கும் விதிமுறைகளை அறிந்திருந்ததாகவும் கே.பி கூறியதாக, பல ஆங்கில ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இது திட்டமிட்ட வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் ஒரு பரப்புரை என்பது நன்கு புலனாகிறது. விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க்கும் இலங்கை அரசு, தற்போது அப்படி ஒரு அமைப்பு இனி மீண்டும் எழ வாய்ப்பில்லை எனக் கூறிவருகிறது.
இதனிடையே அவ்வமைப்பை அரசியல் பாதையில் நகர்த்த கே.பி திட்டமிட்டிருந்தார். அதனைத் தடுக்கும் நோக்கில் அவரையும் கைதுசெய்த இலங்கை அரசிற்கு தற்போது, புதுத் தலைவலி ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் புலிகளை பல உலக நாடுகள் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இட்டிருந்தன, தற்போது புலிகள் மீதுள்ள தடையை அகற்ற புலம்பெயர் தமிழர்கள் பல நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதால் சில நாடுகள் அதனைக் கருத்தில் எடுக்கும் சூழ் நிலை உருவாகியிருக்கிறது.
அதனைத் தடுக்கும் நோக்கில் ஜரோப்பிய மற்றும் மேலைத்தேய நாட்டவர் வெறுக்கின்ற செயல்களுள் ஒன்றான அணு ஆயுதம் என்னும் கருவியைப் பயன்படுத்த இலங்கை அரசு முயல்கிறது. இந்தவகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முனைந்த தீவீரவாத இயக்கம் என்ற முத்திரையைக் குத்தி தொடர்ந்தும் உலக நாடுகள் புலிகளைத் தடைசெய்யவேண்டும் என்ற கருத்தை ஊக்குவிக்க முனைகிறது மகிந்தவின அரசு.
முன்னர் பரப்புரையாக மேற்கொள்ளப்பட்டுவந்த சிறுவர் படையணி, மற்றும் தற்கொலைத் தாக்குதல், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளை இப்போது புலிகள் இயக்கத்தின் மீது கூற முடியாத காரணத்தால், புதுக் காரணிகளை கண்டுபிடிக்க முணைகிறது, மகிந்தவின சிந்தனைகள்...

கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்


அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா... சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா... என்றெல்லாம் மனது கொதித்தது.


கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், ""தாய், தகப்பன்...'' என்று ஆரம்பிக்கவே, ""எல்லாம் இப்போது நான்தான்'' என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். ""இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்'' என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் "அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...' என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். ""அப்பா... எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா... தண்ணீர் விடாக்குது... கெதியா எழும்புங்கோ அப்பா...'' என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன்.

தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே...

""அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு'' என்று... அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே...
என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே...

""தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்...'' என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு... :

""ஐயா, ஒபாமாவே... கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே... வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே... ஏமாற்றி விட்டீர்களே....'' என்று மனம் புலம்பியது.

(நினைவுகள் சுழலும்)

நினைவுகள் சுழலும்!!!


கி.மு.5-ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த யோபு என்ற நீதிமானைப் பற்றி பைபிள் நீண்டதொரு பதிவு செய்துள்ளது. மனித இனம் பூமியில் தடம் பதித்த நாள்தொட்டு இன்றுவரை விடையின் றித் தொடரும் கேள்வியான ""துன்பங்கள் ஏன்?'' என்பதற்கு பதில் தேட முயன்ற பதிவு அது. நம்பிக்கையில் நிலைத்து நின்றால் எத்துன்பத்தையும் வெல்லலாம் என்பதாக செய்தி சொல்லப்பட்டாலும் "துன்பம் ஏன்' என்ற கேள்விக்கு விடை காணாமலேயே யோபு குறித்த நூல் முடியும். ஆனால் அந்நூலில் வேதனை வெளிப்பாடுகள் பதிவு செய்யப்படும் விதம் யார் படித்தாலும் மறக்க முடியாதது.

யோபுவை மாசற்றவர், நேர்மையுள்ளவர், இறைவனுக்கு அஞ்சி தீமையை விலக்கி நடந்தவர், அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐநூறு ஏர் மாடுகளும் ஐநூறு பெட்டைக் கழுதைகளும் உடைமைகளா யிருந்தன என்றெல்லாம் அந்த ஆகம நூல் அறிமுகம் செய்யும். காலத்தின் கோலத்தில் செல்வங்களை யோபு இழந்து பராரியாகிறார், பத்து பிள்ளைகளையும் மண் வீடு இடிந்து மூடிக் கொள்கிறது. உச்சமாக அவருக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை அருவருப்பான அழி புண் நோய் பற்றிக் கொள்கிறது.

ஆறுதல் சொல்ல நெடுந்தூரத்திலிருந்து வரும் தன் நண்பர்களான ஏலிப்பாஸ், பால்தாத், சோப்பார் மூவரிடமும் யோபு இவ்வாறு புலம்புவார்: ""நான் பிறந்த அந்த, நாள் அழிக! "ஆண் குழந்தையொன்று கருவாகியுள்ளது' என்று சொல்லிய அந்த இரவு தொலைக! பேயிருட்டு அந்த நாளை பீடிக்கட்டும்! ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் அவ்விரவு எண்ணப் படாதொழிக! அவ்விரவின் விடிகாலை விண்மீன்கள் இருண்டொழிக! பிறக்கும்போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப் பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக் கக்கூடாதா? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு? என் வேதனைக் குரல் நீராய் ஓடுகிறது. பெருமூச்சுக்களே எனது உண வாயிற்று!''.

ஆம், வன்னிப் பகுதியின் வதை முகாம் களில் எமது மக்களுக்கும் இன்று பெருமூச்சுக் களே அனுதின உணவு. அக்டோபரில் பெருமழை வரும், பேரவலம் அம்மக்களைச் சூழும் என்று கடந்த வாரம் நாம் எழுதி முடிக்கவில்லை- கால் தடுக்கி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஆகஸ்ட் மாதத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை மழை பெய்தது. மூன்று மணி நேர மழையில் கோழி-முயல் கூடுகள்போல் தமிழ் மக்களுக்குத் தரப்பட்ட பாலித்தீன் குடிசைகள் நீரில் மிதந்தன. கூரைகள் காற்றோடு போயின. பல்லாயிரம் மக்கள் ஆடு, மாடுகள் போல் அடையுண்டு கிடக்கும் அத்திறந்த வெளிச் சிறையின் மலக்கிணறுகளும் குடிநீர் கிணறு களும் ஒன்றாய் கலந்தன. இரண்டு நாட்களாய் தீ மூட்டி அடுப்பமைக்க முடியாமல் எம் மக்கள் பெருமூச்சை உணவாக்கினார்கள். பாம்பு, பூரான், புழுக்களின் படையெடுப்பு, நோய்களின் அணிவகுப்பு. மூன்று மணி நேர மழைக்கே இந்நிலையென்றால் அக்டோபர் மாத பெருமழைக் கொடுமை எவ்வாறிருக்குமென எண்ணிப் பாருங்கள்!?


தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இது தொடர்பாக அக்கறையுடன் கடந்த திங்கட்கிழமையன்று பிரதம ருக்கு எழுதிய கடிதத்தில், உள்நாட்டு அகதிகளாய் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்திட இந்தியா அரசு அளவிலும் அரசியல்ரீதியாகவும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என்று எழுதியுள்ளார். முதல்வரின் கவன ஈர்ப்பு மற்றும் வேண்டுதல் கடிதம் மிகவும் வரவேற்கத்தக்கது. இறையருளை நாம் மன்றாடி யாசிப்பது ஒன்றே: முதல்வரது கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், முக்கிய அமைப்பு களின் தலைவர்கள் ஓரணியாக பிரதமரை சந்தித்து எக்குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை யுத்தக் குற்றவாளிகள்போல் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி, உடனடியாக விடுதலை செய்து அவர்கள் தம் வாழ்விடங்களுக்குத் திரும்பிட வழி செய்திடும் அரசியல் அழுத்தம் கொணர வேண்டும். மாண்புமிகு முதல்வரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், ஏனைய முக்கிய தலைவர்களும் இது விஷயத்தில் ஓரணியாக புதுடில்லி சென்றார்களென்றால் அது, ஈழப்பிரச்சனை அனைத்துலகமயமாக்கப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை உலக அளவில் உருவாக்கும்.

வன்னிப் பகுதியெங்கும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது, ஆதலால்தான் இம்மக்களை உடனடியாக வாழ்விடங்களுக்கு அனுப்ப முடியவில்லை, கண்ணி வெடிகளை முற்றிலுமாய் அகற்ற ஆறு மாதங்கள் ஆகலாம், ஓராண்டு மூன்றாண்டு கள்வரை ஆகலாம் என்ற இலங்கை அரசின் மோசடி நிறைந்த இன அழித்தல் தொடர்திட்டப் பொய்யினை முதலில் உடைத்தெறிந்து அம்பலப் படுத்துகிற அவசரக் கடமை நமக் கிருக்கிறது. இலங்கை அரசின் கேவலமான இப்பொய்க்கு இந்திய அதிகார வர்க்கமும் இணைந்து பக்க வாத்தியம் வாசிக்கிறதென்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பயங்கரவாதப் பூச்சாண்டி அச்சுறுத்தல் களுக்கெல்லாம் அப்பால் அறநெறித் திமிறலும் மீறலும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் நாம் நிற்கிறோம்.

வன்னி நிலத்தின் 75 சத பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை. கிளிநொச்சியில் வாழ்ந்த மக்கள் புதுக்குடியிருப்பு, முள்ளி வாய்க்கால் நந்திக்கடல் வரை சென்றதெப்படி? மூன்றரை- நான்கு லட்சம் மக்கள் மீண்டும் தப்பித்து வவுனியா வரை வந்ததெப்படி? நிலமெலாம் கண்ணி வெடிகளென்றால் நான்கு லட்சம் மக்கள் எப்படி நீண்ட நெடும்பயணம் செய்திருக்க முடியும்? கண்ணிவெடிப் பொய் பாதித் தமிழர்களை கொன் றழிக்கவும் மீதிபேரை வாழ முடியாதவர்களாகவும் ஆக்கும் கோத்தபய்யா கொலை சேமிப்புத் திட்டம்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உயர் ஆணையமும், அனைத்துலக மன்னிப்பு சபை யும் (Amnesty International) கடந்த வாரம் மிகத் தெளிவாக தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன : Freedom of movement is the first and fundamental right of the internally displaced people. ""உள்நாட்டு அகதிகளைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் இடத்திற்கு நகர்கின்ற உரிமை முதலானதும், அடிப்படையானதும் ஆகும்.'' ஏனென்றால் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் அப்பாவி மக்கள், யுத்தக் குற்றவாளிகளல்ல. ஏனென்றால், ராஜபக்சே-கோத்தபய்யா கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது இன அழித்தல் திட்டத்தை முழுமை செய்வதற்காக. ஏனென்றால், தமிழர்களை அடைத்து வைத்துக் கொண்டு சிங்களவர்களை வன்னிப்பகுதியில் ராணுவம் குடியமர்த்தத் தொடங்கியுள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே நண்பர்களே புலிகளின் பாதுகாப்புக் கவசத்தை இழந்து ஏதிலிகளாய் நிற்கும் அம்மக்களுக்கு தமிழர்களாகிய நாம் அரசியல் கவசமாய் எழுவோம்.

1997-ல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வன்னி விளாங்குளம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த எமது வானொலி நேயர் பேதுருப் பிள்ளை எழுதிய மறக்க முடியாத கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன. மனிதருக்கு அப்போதே வயது 70-க்கு அருகில். சர்க்கரை, இதய வியாதிகளெல்லாம் உள்ளவர். அவரைப் பற்றி ஒரு தருணத்தில் விரிவாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதியிருந்தார், ""பருத்தித்துறை என் சொந்த ஊர். சொந்த மண்ணிலேயே அகதியாகி வன்னி விளாங்குளம் வந்துள்ளோம். காட்டு வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நான் கொடுக்க வேண்டிய விலை அதுவென்றால் நான் காட்டுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.'' -எழுபது வயதில் இந்தத் திமிறலென்றால் உங்களுக்கும் எனக்கும் எப்படி இருக்க வேண்டும்? சுதந்திரத்திற்கு இணையாக உலகில் வேறெந்த விழுமியங்களும் இல்லை.

இந்த வன்னி மக்கள் இறுதிவரை களம்நின்று போராடியது உண்மையில் அமெரிக்கா போல் வளம் கொழித்துப் பெருவாழ்வு வாழ வேண்டுமென்ற கனவுகளோடல்ல. சிங்களவனின் அதிகாரமும் அழிச்சாட்டியமும் இல்லாமல் தங்கள் குடிசையில், வளவில் சுதந்திரமாய் காற்றை சுவாசித்துக்கொண்டு தன்மதிப்புடன் வாழும் விருப்போடு மட்டும்தான். ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலை நினைத்துப் பார்க்க முடியாதது. சிவரூபன் இதுவரை சொன்னது கொஞ்சமே. இதோ மேலும் தொடர்கிறார்.

""என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். "கடவுளே' என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

""தம்பி... உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ'' என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே... எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

(நினைவுகள் சுழலும்)

என் தேர்தல் தோல்விக்கு ராஜபக்சே காரணமல்ல:மணிசங்கர் அய்யர்

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கொழும்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர்,

’’மயிலாடுதுறை தொகுதியில் நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி அடைந்து மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது.

என் தோல்விக்கு ஏதாவது ஒரு காரணத்தை கூற நான் விரும்பவில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே என மகள் திருமணத்தில் பங்கேற்ற சி.டி.யை வைத்து எதிர் பிரச்சாரம் செய்ததால் தான் நான் தோற்றேன் என்பதையும் ஏற்க மாட்டேன். என் தோல்விக்கு ராஜபக்சே காரணம் அல்ல’’என்று தெரிவித்தார்.

மீண்டும் கொரில்லா போருக்கு தயாராகும் விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் பத்மநாதனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விடுதலைப்புலிகள் தொடர்பான பல்வேறு ரகசியங்களை கூறி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகள் மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டுகளை வாங்க முயற்சித்தாகவும், அணுகுண்டு ரகசியங்களை தெரிந்து கொள்ள முயன்றதாகவும் கூறி இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் உதவியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்மநாதன் கைதாகிவிட்டதால் அதற்கு அடுத்த கட்ட தலைவராக இருந்த நெடியவன் தற்போது விடுதலைப்புலிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தற்போது நார்வே நாட்டில் வசித்து வரும் அவர் அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வெளிநாடுகளில் பணம் திரட்டும் பிரிவுக்கு நெடியவன்தான் தலைவராக இருந்தார். இப்போது அவர் மீண்டும் நிதி திரட்டும் பணியில் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன.

விடுதலைப்புலிகள் ஆரம்ப காலத்தில் நடத்திய கொரில்லா போரை மீண்டும் தொடங்கும் திட்டத்துக்காக நிதி திரட்டுவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

எனவே எந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் கொரில்லா போரை தொடங்க கூடும் என்ற அச்சம் இலங்கையில் நிலவுகிறது.

விடுதலைப்புலிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இறுதிகட்ட போர் நடத்த மே மாதம் வரையிலும் ஏராளமான பணத்தை திரட்டி உள்ளனர். அதுவும் நெடியவனிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்குச் சொந்தமான, குறித்த கப்பல்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிட்டியுள்ளன.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணகளின் போது இந்த தகவல்கள் திரட்டப்பட்டதாக திவயின செய்தித் தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சில கப்பல்கள் இன்னமும் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல்கள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா உதவியது அம்பலம்: அதிர்ச்சி தரும் புத்தகம் (எ.டி.டி.வி.யின் இராணுவ செயதியாளர்

ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ செய்தியாளர் நிதின் கோகலே தனது "இலங்கை சமாதானத்தில் இருந்து போர் வரைக்கும்" என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்.டி.டி.வி.யின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா செய்த மறைமுகமான உதவிகளால்தான் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் என்றும் கோகலே தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ராணுவ ரீதியிலான உதவிகளை இந்தியா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியல் நெருக்குதல்கள் (தமிழக கட்சிகள்) காரணமாக வெளிப்படையாக உதவிகள் செய்யாத மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் கூறுகிறார் கோகலே.

இந்தியா மறைமுகமாக மிகப் பெரிய உதவிகளைச் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பகிரங்கமாக ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததுமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் கோகலே.

கோகலேவின் நூலிலிருந்து சில பகுதிகள்...

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே, அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பார்கள், ஒன்று கூடுவார்கள், சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராஜபக்சே.

அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் இலங்கைப் படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கைப் படையினரை பலப்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராஜபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார்.

ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் என்ற பட்டியலுடன் அவரது சகோதரர்கள் பசில் மற்றும் கோத்தபயா ஆகியோர் டெல்லி விரைந்தனர். அந்தப் பட்டியலில் - வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

ராஜபக்சேவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இந்தியா அப்போது இருந்தாலும் கூட அவர் கேட்ட ஆயுதப் பட்டியல் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்தியத் தரப்பிலிருந்து சரி, இல்லை என்ற பதில் வராததால், சற்று ஏமாற்றத்துடனேயே பசிலும், கோத்தபயாவும் கிளம்பிப் போனார்கள். இருந்தாலும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு உடனடியாக பதில் தராமல் இருந்ததற்குக் காரணம் உள்ளூரில் அதற்கு இருந்த அரசியல் நெருக்கடிகளே. ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவை அப்போது காங்கிரஸ் கட்சி நம்பியிருந்தது. திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனே ஆட்சி கவிழும் அபாயம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க நடவடிக்கைக்கு நிச்சயம் கருணாநிதி ஆதரவு தர மாட்டார், அதை அனுமதிக்கவும் மாட்டார் என்பதால், இந்திய அரசு தயக்கம் காட்டியது.
எனவே இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதிலலை என்ற முடிவை காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்தது.
முதலில் போன ஹெலிகாப்டர்கள்...

2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வழங்கி ஹெலிகாப்டர்கள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருந்தனவாம்.

மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த ஹெலிகாப்டர்கள் உதவிகரமாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால். ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.

2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது. ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம். இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்...

இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

இதை ராஜபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிஸ்தான், சீனாவின் உதவிகளை அவர்கள் நாடத் தொடங்கினர். அதே சமயம், முற்று முழுதாக இந்தியாவை புறக்கணித்து விட முடியாத நிலையும் ராஜபக்சேவுக்கு. "

இதனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரிசமமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர் பசில், கோத்தபயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் வேலை, தினசரி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை அப்டேட் செய்வது.

அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.

இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டன. ஒருவருக்கொருவர் தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர். இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை. மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின்போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

2007-09 ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது.

இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்படைந்திருந்தது.

2008 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் சார்க் அமைப்பின் 15வது மாநாடு நடக்கவிருந்தது. இந்த நிலையில்தான் ஜூன் மாதம் இந்திய விமானப்படை விமானம் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விஜய் சிங் குழுவினர். அவர்களது வருகை கிட்டத்தட்ட ரகசியப் பயணமாக வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள், சார்க் மாநாட்டில் பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் என அப்போது எதிர்பார்ப்பிருந்தது.

அதுபோல நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை முடுக்கி விட வேண்டும் என மேனன் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்தியப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்புவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை ஏற்குமாறும் இலங்கையை அது வலியுறுத்தியது.

ஒருவேளை இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை இலங்கை ஏற்காவிட்டால் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் மிரட்டலாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் படை வருகையை இலங்கை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டது.

அதன்படி இந்திய கடற்படைக் கப்பல்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.
தேர்தலுக்கு முன்பு 'முடிக்க' விரும்பிய இந்தியா...

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர்.
கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது.

பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது. பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது.

இந்த பயணத்தின்போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள். இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது.

இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிஸ்தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராஜபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது - 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.

தேர்தலின்போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராஜபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து மேனன், நாராயணன், விஜய் சிங் கோஷ்டியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.

கை கொடுத்த இந்திய கடற்படை...

இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.
இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.

2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது.

உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன.

அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள். இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உஷார்படுத்தும்.

உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.

இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் - இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார்.
மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. அத்தனையையும் தகர்த்தே விட்டோம்.

ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.
இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.

இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை.

புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது.

கடந்த மார்ச் மாதமே, இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம், அப்போது இந்தியாவில் லோக்சபா ஜூரம் தீவிரமாக இருந்ததால். ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள், இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென் பிராந்திய கமாண்ட் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007ம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கி விட்டது.

இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு.
இந்தத் தீவு ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது.

இந்த தீவை கடற்புலிகளைக் கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை.

ஆனால் 2007ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை தூக்கிக் கொண்டு தப்பினர்.

இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடனடியாக உதவி செய்தது. ஆனால் என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட, பாகிஸ்தான், சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது

இந்தியாவின் புழக்கடை வழியாக சீனாவும், பாகிஸ்தானும் மெல்ல மெல்ல ஊடுறு வருவதை இந்தியா மெளனம் மற்றும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் 2007ம் ஆண்டு மே மாதம் எம்.கே.நாராயணன் இப்படிக் கூறினார் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் மிகப் பெரிய சக்தி என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் ஆயுதம் வாங்குவதை அது கைவிட வேண்டும். எங்களது வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை இலங்கை உணர வேண்டும் என்றார்.

இலங்கைக்கு உதவ வேண்டும். அதேசமயம், வெளிப்படையான ஆயுத உதவிகளால் ஆட்சி பறி போகும் என்ற இரட்டைக் குழப்பத்தில் அப்போது இருந்தது காங்கிரஸ் அரசு. இருப்பினும் இந்தக் குழப்பம் ஏற்பட உண்மையில் இலங்கை காரணம் அல்ல. அது காங்கிரஸ் அரசாக ஏற்படுத்திக் கொண்ட குழப்பம்தான்.

ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதேசமயம், சீனா, பாகிஸதானையும், இலங்கைக்குள் விட்டு விடக் கூடாது என்ற இரட்டை நப்பாசையால் ஏற்பட்ட குழப்பம் அது.
ஆனால் இலங்கைக்கு அந்தக் குழப்பம் இல்லை. இந்தியா இல்லாவிட்டால் சீனா, பாகிஸ்தான் என அது தெளிவாகவே இருந்தது.
இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம் ...

இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் - முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம்.

முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர். மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம்.

அதேசமயம், பாகிஸ்தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார்.

இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிஸ்தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிஸ்தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே

புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன: லங்காதீப


தமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் நயகம் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன. இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக வானூர்திகள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த வானூர்திகளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் எரித்திரிய பாதுகாப்புத் தரப்பினருடனும், அந்நாட்டின் வானூர்தி நிலைய அதிகாரிகளுடனும் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது."

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA