நடிகர் விஜய், சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. ஆனால், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பல முனைகளிலும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த திட்டத்தை அவர் "கை' விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
அரசியலில் ஈடுபடுவது தொடர்பான தன் முடிவை விஜய் இன்னும் அறிவிக்காத நிலையில், அவரை ராகுல் காந்திக்கு இணையான தலைவராக வர்ணித்து, கோவையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை நகரம் முழுவதும் நடிகர் விஜய்யை வானளாவப் புகழும் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு பேனரில், திருப்பாச்சி நினைச்சா, காங்கிரஸ் ஆட்சி' என்ற வாச கமும், மற்ற பேனர்களில் "விஜய்னா வில்லு, காங்கிரஸ்...' என்ற வாசகங்களும் இருந்தன.
காங்கிரஸ் என்பதற்குக் கீழே இருந்த வார்த்தை, வெள்ளை ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருந்தது. விஜய் நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்பதைப்போல, வாசகங்கள் இருந்ததைப் பார்த்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப் படைந்துள்ளனர்.
வால்பாறை எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மகன் விஷ்ணு, இந்த "பிளக்ஸ்' பேனர்களை கோவை நகர வீதிகளில் வைத்துள்ளார். சட்டக் கல்லூரி மாணவரான இவரை, திடீரென மேடையேற்றி, முன்னிலைப்படுத்துவதில் வாசன் கோஷ்டியினரே கோவை தங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
அது மட்டுமின்றி, ஸ்டாலினுடன் இருப்பதுபோலவும், ஸ்டாலின் கை கொடுப்பது போலவும் போஸ்டர் அடித்து, கோவை நகரில் பல இடங்களில் ஒட்டியதிலும் காங்கிரசாருக்கு கடும் அதிருப்தி. இதெல்லாம் போதாதென்று, இப்போது நடிகர் விஜய்யை முன்னிலைப் படுத்தி, இவர் பிளக்ஸ் பேனர்களை வைத்திருப்பது, காங்கிரசாரின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.