தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெறுவதற்கு சிறிலங்காப் படை எவ்வாறான உபாயங்களைக் கையாண்டது என்பதையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த படைத்துறை அதிகாரிகள் பலர் தற்போது கொழும்பு வந்திருப்பதாக சிறிலங்காவின் ஆங்கில நாளேடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா அரசு முறியடித்து நான்கு மாதங்கள் சென்றுள்ள நிலையில், இந்தப் போரில் சிறிலங்காப் படையினர் புதிய உபாயங்களைக் கடைப்பிடித்திருப்பதாகக் கருதும் உலக நாடுகள் பலவும் அந்த உபாயங்களை அறிந்துகொள்வதில் அதிகளவு ஆர்வத்தைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சக்தி வாய்ந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்காப் படையினர் கையாண்டிருக்கக்கூடிய புதிய உபாயங்கள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அதிகளவு ஆர்வத்தைக் காட்டுவதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பசிபிக் நாடுகளின் படைத்துறை தளபதிகளின் மாநாடு இரு வாரங்களுக்கு முன்னர் ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட பலம் வாய்ந்த நாடுகளின் படைத்துறை தளபதிகள் பலரும் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படை எவ்வாறு வெற்றிகொள்ள முடிந்தது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓகஸ்ட் மாதம் 24 ஆம் ஆம் நாள் தொடக்கம் 28 ஆம் நாள் வரையில் ரோக்கியோவில் நடைபெற்ற இந்த மாநாட்டை அமெரிக்காவும், ஜப்பானும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த நாடுகளின் படைத்துறை தளபதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தரைப்படைத் தளபதி ஜகத் ஜயசூரிய, மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் 13 நாடுகளைச் சேர்ந்த படைத்துறை தளபதிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுக்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்புக்களின்போது புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படை எவ்வாறு முன்னெடுத்தது என்பதை அறிவதிலேயே அவர்கள் அக்கறை காட்டினார்கள்.
இது தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் தமது படைத்துறையின் உயர் மட்டக்குழுக்களை சிறிலங்காவுக்கு அனுப்பிவைப்பதற்கு இந்த படைத்துறை தளபதிகள் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடனான போரை தனியாக ஆராய்வதற்கும் அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள்.
சிறிலங்காப் படை கையாண்ட உபாயங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் கொடுப்பதற்கும் சில நாடுகள் முன்வந்திருப்பதாகத் தெரிவித்த சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், இருந்த போதிலும் இந்தத் தகவல்களைப் பணத்துக்கு 'விற்பனை' செய்வதற்கு தாம் விரும்பவில்லை எனவும், இந்த அனுபவங்களை இலவசமாகப் பகிர்ந்துகொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே பல நாடுகளைச் சேர்ந்த டசன் கணக்கான படை அதிகாரிகள் சிறிலங்காப் படையினரின் உபாயங்கள் தொடர்பாகக் கற்பதற்காக கொழும்பு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு படைத்துறை உபாயக் கல்வி நிலையம் ஒன்றை சிறிலங்காப் படை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா அங்கு இடம்பெற்ற வன்முறையற்ற போராட்டம் தொடர்பாக விளக்கும் வகையில் கல்வி நிலையம் ஒன்றை அமைத்திருக்கின்றது. வெளிநாடுகளைச் சேர்ந்த அரசுகளும் தனிப்பட்டவர்களும் இங்கு கல்வி கற்க முடியும். அதற்காக கட்டணம் ஒன்றும் அறவிடப்படுகின்றது.
அதேபோல சிறிலங்கா அரசும் தமது படைத்துறை உபாயங்கள் தொடர்பான கற்கைகளுக்கான கல்வி நிலையம் ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என பலரும் ஆலோசனைகளை வழங்கிவருகின்ற போதிலும் சிறிலங்கா அரசு அது தொடர்பான தீர்மானம் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன