இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள யுனிசெவ் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டருக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவுஸ்திரேலிய பிரஜையான ஜேம்ஸ் எல்டரை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறிவிடுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் உதவி தமக்கு தேவையில்லை என்று எல்டர் கூறுவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார். இதிலிருந்து, எல்டர் அவரது கடமையையே செய்கிறார் என்று தெளிவாகின்றதென ஸ்மித் மேலும் தெரிவித்தார்.
எனினும், எல்டர் சொன்னவற்றை எல்லாம் அல்லது அவர் செய்தவற்றை எல்லாம் தமக்கு தெரியாதெனக் கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர் அவர் சொன்னதாக தாம் அறிந்தவற்றிலிருந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கருத்தையே அவரும் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கான பூரண வசதிகள் சர்வதேச நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும் என்று குறிப்பிட்ட அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கையில் பெரும் பணியாற்றிவரும் யுனிசெவ்வுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இது பொருந்தும் என்று கூறினார்