சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதுவரை சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை எதுவும் செய்யவில்லை.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் மொறினோ-ஒக்காம்போ நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துலக வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எந்தெந்த நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துள்ளன, எந்த நாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன (மஞ்சள் புள்ளிகள்), சட்ட நடவடிக்கைகள் எந்தெந்த நாடுகளில் நடைபெற்று வருகின்றன (4 சிவப்பு புள்ளிகள், ஆபிரிக்க நாடுகளில்), எந்தெந்த நாடுகளில் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன (பச்சைப் புள்ளிகள்) போன்ற விவரங்கள் நிறங்கள் மூலம் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. அந்த வரைபடத்தில் சிறிலங்கா பச்சைப் புள்ளியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிம்பாப்பே மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளும் பச்சைப் புள்ளிகளால் காட்டப்பட்டுள்ளன. இதனுடைய அர்த்தம் என்னவெனில் இந்த மூன்று நாடுகளிலும் அரசாங்கங்கள் உட்பட தரப்புகளால் போர்க் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்பதாகும் என இன்னர் சிற்றி பிறஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஆபிரிக்காவில் உள்ள தோல்வியடைந்த தலைவர்களுக்கு எதிராக மட்டுமே விசாரணைகள் நடத்தப்படுகின்றன எனவும் அது தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பினபோது, அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் மொறினோ-ஒக்காம்போ வைத்திருந்த ஆவணங்களுடன் இந்த வரைபடமும் வைக்கப்பட்டிருந்தது என இன்னர் சிற்றி பிறஸ் தெரிவித்தது.