"ஆனையிறவு நுழைவாயிலில் பெளத்த மடாலயம் கட்டப்படுவதாக அறிகின்றோம். கிளிநொச்சியில் படையினருக்கான நினைவாயலங்கள் கட்டப்படுகினறன. இதனால் பொதுமக்களின் வீடுகள், கட்டங்கள் அழிக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் கலாசாரம் அழிக்கப்படுகின்றது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை நேற்று தெரிவித்த சம்பந்தன், "இதுதான் தமிழ் மக்களின் விடுதலையா? இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்வதற்காகவா விடுதலைப் புலிகளை அழித்தீர்கள்?" எனவும் கேள்வி எழுப்பினார்.
"எமது மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். துருப்புக்களின் இருப்பு எமது மக்களுக்குப் பெரும் தொல்லையாக உள்ளது. துருப்புக்களின் இருப்புக் காரணமாக நாம் அடிமைகள் போல இருக்கின்றோம். கெளரவத்துடன் வாழ்வதற்கான உரிமை எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது மக்களின் உரிமைகளை உங்களால் மறுக்க முடியாது" எனவும் குறிப்பிட்டார்.
சம்பந்தன் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:
"வவுனியா முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டும். எங்கிருந்து அந்த மக்கள் வந்தார்களோ அந்த இடங்களிலேயே அவர்களை மீளக்குடிமயர்த்த வேண்டும். இது விடயத்தில் இந்த அரசுக்கும் ஐ.நா. மற்றும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கின்றது.
மக்களை மீளக்குடியேற்ற 180 நாள் வேலைத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று 100 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் மந்த கதியிலேயே முன்னேற்றம் இருக்கின்றது. அகதிகள் விடயத்தில் அரசின் நடவடிக்கைகளையிட்டு எம்மால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
பருவமழை தொடங்க முன்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரும் அனர்த்தம் இடம்பெறும். மீள்குடியேற்றத்துக்கு அரசு கண்ணிவெடிகளைக் காரணமாகக் கூறுகின்றது. கண்ணிவெடிகள் இல்லாத இடங்கள் தொடர்பான விபரங்களை நாம் அரச தலைவரிடம் கொடுத்துள்ளோம்.
தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது முஸ்லிம்களும் மீளக்குடிமயர்த்தப்பட வேண்டும் எனவும் அரச தலைவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.
போர் முடிவடைந்துவிட்டதால் துணைப் படைக் குழுக்களிடம் இருந்து உடனடியாக ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களை முற்றாகச் செயல் இழக்கச் செய்ய வேண்டும். வடக்கு - கிழக்கில் இருந்து இவர்கள் களையப்பட்டால் மட்டுமே எம்மால் சுதந்தரமாகச் செயற்பட முடியும்.
படையினரின் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும். படைக் குவிப்பு நிறுத்தப்பட வேண்டும். வடக்கு - கிழக்கில் இருந்து படைகளுக்கோ காவல்துறைக்கோ ஆட்சேர்ப்பு இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் அதனை பொதுமக்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே பார்ப்போம்."
இவ்வாறு சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்