விடுதலைப்புலிகள் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் பல அரச நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானிடம் இருந்து இலங்கை ரெலிகொம் பங்குகளை மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ்ணனின் மெக்ஷீஸ் நிறுவனம் அதிக விலையில் கொள்வனவு செய்திருந்தது.
இந்தக் கொள்வனவு தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக ஜே.வி.பி. மாத்திரமல்லாது, தொழிற்சங்கங்களும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன. ஆனந்த கிருஷ்ணனின் மெக்ஷீஸ் நிறுவனம், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் 49 வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளது.
மெக்ஷீஸ் நிறுவனத்தை ரெலிகொம் பங்குகளை பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்காக இலங்கைக்கு அழைத்து சென்றவர்கள், ஜனாதிபதிக்கு நெருக்கமான ரொஷான் காரியபெரும மற்றும் பிரியந்த காரியபெரும ஆகிய இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறிது காலத்தில் மெக்ஷீஸ் நிறுவனம் இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு, அதன் இலங்கை பிரதிநிதியாக திவயின பத்திரிகையின் அரசியல் செய்தியாளர் மனோஜ் அபேவீரவை நியமித்தது. தற்போது மனோஜ் அபேவீரவே மெக்ஷீஸ் நிறுவனத்திற்கான இலங்கையின் அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மெக்ஷீஸ் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரான இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஆனந்த கிருஷ்ணன், மலேசிய நாட்டின் இரண்டாவது நிலையில் இருக்கும் மிகப் பெரிய செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.