சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் புலிகளை தடுத்துவைத்துள்ள முகாமிற்குச் செல்ல தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
ஜ.நா சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே இதுபற்றி மேலும் தெரிவிக்கையில் தற்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக் கூறப்படும் சுமார் 10,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்துவைக்கப் பட்டுள்ளதாகக் கூறினார்.
இவர்களை மிக அரிதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பார்வையிட்டு வந்ததாகவும், இருப்பினும் தற்போது இது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வடக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பல கிளைகள் மூடப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் வடக்கில் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கில் இயங்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. இந் நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போர்க்கைதிகளான விடுதலைப் புலிகளை, ஜெனீவா போர்கைதிகள் சட்டமூலத்திற்கமைய நடத்தப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் அங்கிருந்து அகற்றப்பட்டால், சரணடைந்த புலிகளின் நிலை என்ன ஆகும் என பெரும் சந்தேகங்கள் தோன்றியுள்ளது