இலங்கையின் பாசிச அரசைப் பொறுத்த வரையில் உண்மையையும் தர்மத்தையும் யார் சொன்னாலும் அவர்கள் புலிகள் என நாமம் சூட்டிவிடுவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தரைப்புலி, கடற்புலி, வான்புலி, உளவுப்புலி எனப் பலபிரிவுகளைக் கொண்டிருந்தாலும், இன்று மேலும் சில புலிக்கூட்டங்கள் இலங்கை அரசினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.
அவையாவன, வெள்ளைப்புலி, சிங்களப்புலி, இலங்கையின் இராணுவப்புலி என மேலும் பல பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அப்படி இனங்காணப்பட்டவர்களால் வெளிக்கொண்டு வரப்படும் உண்மைகளும், அவற்றிற்கான சாட்சியங்களும் சர்வதேசத்தின் முன் கொண்டுவரப்படும் இன்றைய காலகட்டத்தில் ராஜபக்சவும், அவரது சகாக்களும் கிலி பிடித்தவர்களாக உள்ளனர்
அண்மையில் இலங்கை இராணுவத்திலிருந்து தப்பி வெளிநாட்டில் அரசியல் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ள உதவி ஜெனரல் தரத்திலான இராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசியின் மூலம் மேலும் பல திடுக்கிடும் தமிழின அழிப்பிற்கான காட்சிப்படத் தகவல் சாட்சியங்கள் மேலும் வெளிவர உள்ளது. அதன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் அவரால் வெளிக்கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கான தகவல்களை தற்போது இலங்கையின் இராணுவ அணியைச் சேர்ந்த முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மூலமே மின்அஞ்சல் மற்றும் எம்.எஸ்.என் மூலம் வெளிநாடுகளுக்கு வெகு இலகுவாக அனுப்பப்படுகின்றது. இத்தகைய சரியான சாட்சியங்கள் யாவும் மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் பதிவு செய்யப்படுவதுடன், வெகுவிரைவில் சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ச அன் பிறதேஸ் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட உள்ளனர்.
அதன் அடிப்படையிலேயேதான் அவர்களின் அண்மைக்கால வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்கள் யாவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் சுற்றுலாவினை மேற்கொள்ளும் எந்த நாட்டிலும் திடீரென கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படலாம். அதற்கான அனைத்து சட்டநடவடிக்கைகளும் தயார்நிலையில் உள்ளது.
அத்துடன், வவுனியாவில் உள்ள மின்சார முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகளும்கூட ஒளிப்படக்காட்சியாக வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அத்துடன் அகதி முகாம்களில் உள்ள மக்களைக் கொன்றொழிக்கும் இன அழிப்பிற்கான நடவடிக்கைக்காவே அவர்களை மீள்குடியேற்றம் செய்வதைக் காலதாமதமாக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கைஅரசு, என்னும் குற்றச்சாட்டும் மேற்படி சர்வதேச நீதிமன்றக் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்படி தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் முக்கிய உறுப்பினர்களில் இராணுவத்தில் கடைமையாற்றுபவர்கள் மட்டுமல்ல, இராணுவத்தில் சேவையாற்றியதன் மூலம் அங்கவீனர்களாகி, அவர்களுக்கான நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதில் அரசினால் எமாற்றப்பட்ட விரக்தியில் உள்ளவர்களும் இதில் உள்ளடக்கமாம்.
அதுமட்டுமல்லாது, போர்முனையில் இறந்துபோய் அடையாளம் காணப்படாது அந்த இடத்திலேயே எரித்துச் சாம்பராக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு எந்த நட்டஈடும் கொடுக்கப்படாது, அந்த இராணுவ வீரர்கள் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் என்று அரசு பொய்ப்பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றது.
அதனை சரியாகக் கண்ட சாட்சியங்களும்கூட இராணுவ மேலதிகாரிகளினால் அரசின் கட்டளைப்படி அழிக்கப்பட்டு விட்டார்கள். இன்றும் இந்த சாட்சியங்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதாபிமானம் மிக்க சிங்கள இளைர்கள் அரசினால் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதுடன், அவர்களின் சாவுக்கான தடயங்களையும் அரசு முற்றாக அழித்து விடுகின்றது.
இதனையெல்லாம் சரியான முறையில் கண்ட சாட்சியங்கள், வேதனையும், விரக்தியும் கொண்ட நிலையில் இலங்கை அரசின் இன்றைய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கான தடையங்களை வெளியுலகிற்குக் காட்டுகின்ற செயற்பாட்டையும், அதற்கான சாட்சியங்களாகவும் செயற்பட உள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தில் சேவையாற்றியதன் மூலம் அங்கவீனர்களாகி வாழ்க்கையில் விரக்தியும், ராஜபக்ச அரசின்மீது வெறுப்பும் கொண்டுள்ள பல்லாயிரக் கணக்கான இராணுவத்தினரை சமன்செய்து சரிக்கட்டும் வகையில் அரசு ஒன்றிரண்டு அங்கவீனமான இராணுவத்தினருக்கு அரசில் பங்கேற்க வாய்ப்புக்கொடுப்பதன் மூலம் அவர்களின் நட்டஈடு - கொடுப்பனவுகள், எரிக்கப்பட்டு மறைக்கப்பட்ட இராணுவத்தினரின் தகவல்கள் யாவற்றையும் மூடிமறைத்து சமாளித்துவிடலாம் என கற்பனைசெய்து கொண்டிருக்கின்றது.
இதுவே அவர்களின் எதிர்காலம் இருள்மயமாகும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்பதனையும், அவர்கள் சிறிதும் எதிர்பாராதவிதமாக அமையப்போகின்றது என்பதனையும் அறியமாட்டார்கள்.
யுத்தத்தினை முன்னெடுத்த இராணுவத் தளபதியான சரத்பொன்சேகாவிற்கு சிங்கள மக்களிடையே பெருகிவந்த செல்வாக்கினைக் குறைத்து, அவரது அரசியல் பிரவேசத்தையும், எதிர்கால பிரதம மந்திரிப் பதவிக்கான கனவையும் தகர்த்தெறியும் பொருட்டு ராஜபக்ச அன் பிரதேர்ஸ் செயற்பாடு அமைந்திருந்தது. அந்த வகையில்….
யுத்தமுனையில் திறம்பட சேவையாற்றிய இராணுவ உயர் அதிகாரிகளும், சரத்பொன்சேகாவின் நம்பிக்கைக்கும், நட்பிற்கும் பாத்திரமானவர்களை பதவி உயர்வு என்ற பெயரில் இராணுவத்தை விட்டு வெளியேற்றி அவர்களை கடல்கடந்த சேவைக்கு (வெளிநாட்டத் தூதுவர்களாக) அனுப்பி வைத்தமை,
இராணுத் தளபதி சேவையிலிருந்து இளைப்பாறியதுடன் அரசியலில் தீவிரமாக செயற்படப் போவதாகக் கூறிக்கொண்டு, எதிர்கால ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரிக் கனவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த சரத் பொன்சேகாவின் கனவைக் கலைத்து, அவரை எதிர்காலத்தில் இராணுவ அமைச்சின் செயலாளராக (பல்லுப்பிடுங்கிய பாம்பாக) ஆக்கப்போவதாக திட்டமிட்டிருப்பது,
ராஜபக்ச அன் பிறதேர்ஸ் அனுமதி இன்றி சரத் பொன்செகாவின் அறிக்கைகளோ அன்றி அவரது புகைப்படமோ பத்திரிகை, தொலைக்காட்சி என்பவற்றில் வெளிவரக்கூடாது என தகவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை
சரத்பொன்சேகாவிற்கான பாதுகாப்பினை முன்னரைவிடக் குறைத்துக் கொண்டுள்ளமை.
இத்தகைய செயற்பாடுகளையெல்லாம் மக்கள் செல்வாக்கினையும், பௌத்த மகாசங்க பீடாதிபதிகளின் தனிப்பட்ட செல்வாக்கினையும் பெற்ற சரத் பொன்சேகாவை ஓரம்கட்டி, எதிர்காலத்தில் ஒழித்துக்கட்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற நிலையில் வைத்தக்கொண்டு இன்று அங்கவீனமான இராணுவத்தினருக்கு அரசாங்கத்தில் பங்களிப்பதாகப் பசப்பு வார்த்தை கூறுகின்றார்கள்.
யாருக்கு யார்? ஏங்டிகெங்கு ஆப்பு என்று யார் தான் அறிவாரோ?
அகத்தியன் -