தமிழினத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிக்கமுடியாது. தமிழர்களும், தமிழ்தேசியமும் நகமும் சதையும் போன்றது என்பதை சிங்கள தேசமும் இனவாத சிங்கள அரசியல் கட்சிகளும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நடந்துமுடிந்த யாழ் மற்றும் வவுனியா மாநகராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை வருமாறு:
நடந்து முடிந்த யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்ணா நிலையினையும், உறுதித் தன்மையினையும், நேர்மை அரசியலையும், உரிமை செயற்பாட்டினையும் மதித்து பற்றுறுதியுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது நன்றிகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக நான் பிரதிநிதித்துவம் செய்யும் வன்னி மாவட்டத்தின் இதயமாய் திகழும் வவுனியா நகரசபையின் முழு அதிகாரத்தையும் ஆளுமையையும் முன்னெடுக்கும் உன்னத பணிக்காக எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவு வழங்கிய வவுனியா நகரசபை மக்களுக்கு பிரத்தியேகமான நன்றியறிதலை உரிமையுடன் கூறுவதில் உளமார மகிழ்ச்சி அடைகிறேன்.
வன்னி நிலப்பரப்பில் இடம்பெற்ற பாரிய பேரவலத்தின் கோரத்தாண்டவம், கொலைவெறி அராஜகம் இடம்பெயர்வு என்ற பெயரில் 3 இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் படும் வதைக்கொடூரம் எல்லாவற்றையும் மூடிமறைத்து தமிழ்மக்கள் இலங்கை அரசின் கொள்கைகளை ஏற்றுள்ளனர்; தமிழர்கள் மகிந்த சிந்தனையை மதிக்கின்றனர் என்பதை உலகத்திற்குக் காட்டும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்களை அரசு திட்டமிட்டு நடாத்தியது.
யாழ்ப்பாணம் மாநகரசபை தமிழ் மக்களும் வவுனியா நகரசபை தமிழ் மக்களும் அரசின் கபட நாடகத்தின் முகமூடியை இந்தத் தேர்தல் மூலம் கிழித்தெறிந்து விட்டனர்.
தமிழினத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிக்கமுடியாது. தமிழர்களும், தமிழ்தேசியமும் நகமும் சதையும் போன்றது என்பதை சிங்கள தேசமும் இனவாத சிங்கள அரசியல் கட்சிகளும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
யாழ். மாநகரசபை தேர்தலில் முழுமையாக மக்கள் வாக்களித்திருப்பின் அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கும் என்பதனை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து இட்ம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் எமது இஸ்லாமிய மக்களின் வாக்குகளால் வெற்றிலைக்கட்சி மண்கவ்வுவதில் இருந்து தப்பித்து விட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இனிமேல் வடக்கு கிழக்கில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றே தீருவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அரசிற்கு ஆலவட்டம் பிடித்து 'ஆகா ஓகோ' போட்டவர்களுக்கு இந்தத் தேர்தல் படிப்பினையாக இருக்கட்டும்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் அரசியற் செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒற்றுமையுடன் எமக்கு உறுதுணை வழங்கும்படியும் வேண்டுகின்றேன் என அதில் அவர் கூறியுள்ளார்.