Tuesday 18 August 2009

நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்: திருமாவளவன்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும் என அக் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "எழும் தமிழ் ஈழம்'-தமிழின விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:

இந்த மாநாட்டுக்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வைத்திருந்த 2,000 பேனர்கள் அகற்றப்பட்டன. மத்திய உளவுத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளால் ஏராளமான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நம்மை சீண்டுவார்கள். ஆனால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுப்புணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதும், அடக்குமுறைக்கு ஆளானோர் ஆயுதம் ஏந்துவதும் தவிர்க்க முடியாதது. விளம்பரங்களை அழித்தாலும் எங்கள் உணர்வுகளைத் தடுக்க முடியாது. இன விடுதலை மற்றும் ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காக போராடுவதே விடுதலைச் சிறுத்தைகளின் இரட்டைக் கடமைகள் ஆகும்.

எழும் தமிழ் ஈழம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது. எங்களால் திமுக அரசுக்கு எவ்வித இடையூறும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஆனால், எங்களது கொள்கைகளில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

இறையாண்மைக்கு கட்டுப்பட்டவர்களாக நாங்கள் இருப்போம். ஆனால், தமிழினத்துக்கு எதிரான துரோகத்தை எதிர்ப்போம். தமிழகத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள்.

ஈழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழ் ஈழம் மட்டுமே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இலங்கையில் 3 லட்சம் தமிழ் மக்கள் முள் வேலிக்குள் அகதிகளாக குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவிக்கின்றனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

பிரபாகரன் மீண்டும் ஈழ விடுதலைப் போரை ஏற்று நடத்துவார். அவர் உயிரிழந்தது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இதுவரை ராஜபக்ஷ அறிவிக்காதது ஏன்? இந்திய அரசுக்கு பிரபாகரனின் இறப்புச் சான்று இதுவரை அளிக்கப்படவில்லையே ஏன்?. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் தொடர்ந்து போராடும் பொறுப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. தலைமறைவாக இருக்கும் பிரபாகரன் மீண்டும் திரும்பி வந்து தலைமை தாங்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும். ஈழம் வெல்லும். அதை சரித்திரம் சொல்லும்.

பாமக மீது குற்றச்சாட்டு: தைலாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முன்பு, பாமக இல்லாத அணி வெற்றி பெற முடியாது என்றனர். ஆனால், இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்றார் தொல். திருமாவளவன்.
இதில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போலீஸாரின் கெடுபிடிகளுக்குப் பின்னரும், இந்த மாநாடு நடைபெற்ற திரு.வி.க. பூங்கா சுற்றுப் பகுதிகளில் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி ஆகியோரது உருவத்துடன் திருமாவளவன் படமும் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கூட்டத்தில் பிரபாகரன் படங்கள், வாழ்க்கை வரலாற்றை விளக்கும் "விடுதலைத் தீப்பொறிகள்', "தலை நிமிர்வு', "உயிராயுதம்' ஆகிய சிடிக்கள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டன.

பா.ராகவன் எழுதிய "பிரபாகரன்- வாழ்வும், மரணமும்' என்ற நூல் ரூ. 100 விலைக்கு விற்கப்பட்டன.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA