இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என பிரபல தி எகனோமிஸ்ட் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பான் கீ மூன் வெறும் பார்வையாளராக செயற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, நோர்வேயின் சுழல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் நாட்களில் நோர்வேக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், சம்பவங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு வேடிக்கை பார்த்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் மூலம் பான் கீ மூனின் கடமை தொடர்பிலான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பான் கீ மூன் இதுவரையில் குரல் கொடுக்கத் தவறியுள்ளதாக அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் நோர்வேக்கு விஜயம் செய்யவுள்ள பான் கீ முனுக்கு எதிராக நோர்வேயிலுள்ள தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.