புனர்வாழ்வு இடங்கள் என்ற பெயரில் அணு அணுவாக வதைகளை அனுபவிக்க வேண்டிய முகாம்களை உருவாக்கி துப்பாக்கிமுனயில் தினமும் கண்காணிக்கப்படும் தமிழ்மக்கள் மூன்று லட்சம் பேர், வாழ்வின் எஞ்சிய பகுதிகளை வலிகளுடன் மட்டுமே களித்துக்கொண்டு மரணத்துடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது தினசரி வாழ்க்கை என்பது யுகங்களை கடத்துவது போன்ற மரண வேதனை மிக்கதாக உள்ளது மட்டுமல்லாமல், தமது தொலைந்த உறவுகளின் சிந்தனையால் மனவிரக்தியடைந்த மனநோயாளிகளாக மாறிவிடும் அவலம் மிக்கதாகவும் காணப்படுகிறது.
புனர்வாழ்வு இடங்கள் என்ற பெயரில் அணு அணுவாக வதைகளை அனுபவிக்க வேண்டிய முகாம்களை உருவாக்கி துப்பாக்கிமுனயில் தினமும் கண்காணிக்கப்படும் தமிழ்மக்கள் மூன்று லட்சம் பேர், வாழ்வின் எஞ்சிய பகுதிகளை வலிகளுடன் மட்டுமே களித்துக்கொண்டு மரணத்துடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது தினசரி வாழ்க்கை என்பது யுகங்களை கடத்துவது போன்ற மரண வேதனை மிக்கதாக உள்ளது மட்டுமல்லாமல், தமது தொலைந்த உறவுகளின் சிந்தனையால் மனவிரக்தியடைந்த மனநோயாளிகளாக மாறிவிடும் அவலம் மிக்கதாகவும் காணப்படுகிறது.
போர் தனது கொடூரக்கரங்களால் இந்த அப்பாவிகளை அணைத்துக்கொண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், உயிரைக்கையில் பிடித்தபடி, ஊர் ஊராக இடம்பெயர்ந்து, இன்று சிங்களத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வருடகாலமாக இவர்கள் இடம்பெயர்ந்து ஏதிலிகளாக ஓடிச்சென்றபோதெல்லாம் இவர்களில் பெரும்பாலானவர்களின் குடும்ப உறவுகள் ஒன்றொன்றாய் ஒடிந்தது. இதில் மாண்டவர் பலர். மர்மமாய் மறைந்தவர் பலர். அவர்களது நிலை குறித்து ஏதுவும் அறியாதவர்களாக, அவர்கள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பதை அறியத்துடிக்கும் அவர்களது உறவுகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் சாஸ்திரக்காரர்களிடமும் மாறி மாறி முறையிட்டு தமது மனவலிகளை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
காணாமல்போன உறவுகள் என்றோ ஒரு நாள் திரும்பி வருவார்கள் என்ற அற்ப சொற்ப நம்பிக்கையுடன், “ஆள் இருக்குதாம். சாத்திரி சொன்னவர்” - என்று அழுதபடியே தமது முகாமிற்குள் பேசி - அந்த கதைகூட வெளியில் கேட்டு தமக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்துடன் நித்தமும் மனவலிகளுடன் வாழ்ந்துவருகிறார்கள் இந்த மக்கள். தமது உடல்நிலையை கவனிப்பதற்கு எதையாவது உண்டு தேற்றிக்கொள்ளலாம் என்ற நிலையிருக்கின்றபோதும்கூட தொலைந்துபோன தமது உறவுகளால் ஏற்பட்டுள்ள அவர்களது மனவலிகளுக்கு என்ன மருந்தும் இல்லாத பாவப்பட்ட ஜீவன்களாக அவர்களது வாழக்கை நகர்கிறது.
இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் கடந்த காலங்களில் தமது வாழ்க்கையை, இவ்வாறு ஒரே இடத்தில் உண்டு உறங்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர்கள் அல்லர். தமது காணி, புமியில் விவசாயம் செய்தும் சொந்தமாய் வேறு தொழில்கள் செய்தும் கடல்தொழில் செய்தும் ஒவ்வொரு நாளின் பெரும்பான்மையான பகுதியையும் வேகமாக உழைத்துவந்த மக்கள். அவ்வாறு தமது சொந்த இடங்களில் பல்லாண்டு காலமாக ஓடித்திருந்து வேலை செய்தவர்களை முகாமிற்குள் முடக்கி எந்தவேலையுமில்லாத - ஒரு ஒவ்வாத - சூழ்நிலைக்குள் திணித்திருப்பது, அவர்களை வாழ்வின் விரக்தியை நோக்கிதள்ளியிருக்கிறது. சொந்தமாய் தோட்டம், கடற்றொழில் என தொழில் செய்துவந்த மக்களுக்கு தமது காணிகள் பற்றியும் தமது கடற்றொழில் பற்றியும் தமது காணிகளில் நின்ற தேசத்தின் சொத்துக்களான பயிர்வகைகள் பற்றியும் யோசனைகள் அதிகரித்துள்ளமை மட்டுமல்லாமல் தாம் வாழ்ந்த இடங்களுக்கு இனி திரும்ப முடியுமா என்ற ஏக்கத்தில் ஒரு வித மனநோயாளிகளாக மாறும் ஆபத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அசாதரணமான வாழ்க்கைக்கு பழகவேண்டியவர்களாக - அவற்றை ஜீரணிக்கமுடியாதவர்களாக - தவிக்கும் இந்த மக்களுக்கு புதுவிதமான மனத்தாக்க நோய்கள் வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களில் இளம் சந்ததியினரின் எதிர்காலம்தான் மிகப்பெரிய கேளிவிக்குறியாகியுள்ளது. போரின் கொடூரம் உச்சம் பெற்றிருந்தவேளையில், அந்த இடப்பெயர்வுகளின்போதெல்லாம் எறிகணை வீச்சுக்களினதும் துப்பாக்கிவேட்டுக்களினதும் சத்தங்களை தினமும் கேட்டுகேட்டு, அதனை தமது அன்றாட வாழ்க்கையாக மனதில் பதிவுசெய்துகொண்ட பிஞ்சுகள், இன்று முகாம்களில் அந்த சத்தங்கள் எதுவுமற்ற சூழ்நிலையில், இரவு நேரங்களில் வீறிட்டு அழுகின்றன. தற்போது தாம் வாழ்ந்துகொண்டிருப்பது அசாதரண வாழக்கைமுறை என்று எண்ணத்தொடங்கியுள்ள இந்த பிஞ்சுகள் - எதுவும் அறியாதவர்களாக - மீண்டும் அந்த எறிகணை சத்தங்கள் உள்ள இடங்களுக்கு போகவேண்டும் என்றும் அந்த சத்தங்கள் நிறைந்த இடம்தான் தமது உண்மையான வாழ்விடம் என்றும் “அங்கிருந்து ஏன் இங்கு வந்தோம்“ என்றும் பெற்றோரிடம் கேட்டு கதறுகின்றன. என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பிஞ்சுகளுடன் சேர்ந்து பெற்றோரும் அழுகின்றனர். முகாம் இரவுகள் இப்படித்தான் அங்கு களிகின்றன.
மனவலிமை குன்றிய மக்கள், தமது பழைய வாழ்வை எண்ணியும் தொலைந்துபோன உறவுகளை எண்ணியும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தும் மிகவிரைவில் மனநோயாளிகளாக மாறிவிடும் அபாயமே அங்கு நிலவுகிறது. அங்குவரும் சிங்கள வைத்தியர்கள் இந்த மக்களுக்கு பெயருக்கு மருத்துவம் செய்து செல்கிறார்களே தவிர, போர்வடுக்களை உடலிலும் உள்ளத்திலும் சுமந்த நடைபிணங்களாக நரகவேதனையை அனுபவிக்கும் இந்த மக்களின் உண்மையாக மனவலிகளை அருகே அமர்ந்திருந்து ஆறுதலாக கேட்டு, அவர்களுக்குரிய தேவைகளையும் உரிய மருத்துவ உதவிகளையும் அளிப்பவர்களாக இல்லை.
அங்குள்ள பல்லாயிரக்கணக்கானோருக்கு மனோ ரீதியான வைத்திய உதவிகள் வழங்கவேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அங்கு பணிபுரிந்து வெளியேறிய தமிழ் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள மருத்துவர்களால் அந்த மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஆழமாக புரிந்துகொள்வது தமிழ் மருத்துவர்களுடன் ஒப்பிடுகையில் கடினம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.
இம்மாதிரியான ஒரு சூழ்நிலையில், அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் முட்கம்பிகளுக்குள் வைத்து சிதைக்கப்படும் - நினைத்துப்பார்க்கவே முடியாத - பெரும்பேரவலமாக காணப்படுகிறது. உரிய மருத்துவ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிடின் எதிர்காலத்தில் அவர்களின் உள வளர்ச்சி எனப்படுவது போரும் அது சார்ந்ததாகவும் அந்த நினைவுகள் ஆழமாக வேரூன்றியவர்களாகவே காணப்படப்போகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தேசத்தின் சொத்துக்களாகிய இளம் சமுதாயத்தையும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் ஒரு தடவை இயற்கையின் பேரழிவால் இழந்த தமிழினம் இன்று சிங்களத்தின் சிறைகளில் அணு அணுவாக இழந்துகொண்டிருக்கின்றமை ஒவ்வொரு தமிழனது இதயத்திலும் இரத்தக்கண்ணீரை வரவைக்கிறது.