இலங்கையில் மோதலால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நிராகரித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் 12 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போது இதனை நிராகரித்த அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நவநீதம்பிள்ளை தெரிவித்த கரிசனைகளை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். என்றாலும் முகாம்களின் தன்மை பற்றி அவர் சொன்னவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
இலங்கையில் மனிதாபிமானப் பணிகளைத் திரிபுபடுத்தி பிழையாகச் சித்தரிப்பதற்குத் திட்டமிட்ட முயற்சி ஒன்று இடம்பெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் போலியான வீடியோ ஒன்று ("சனல்4") பல சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
அதனால் எமக்கு ஆரம்பத்தில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. பான் கீ மூன் கூட இது குறித்துக் கவலை வெளியிட்டார்.
தற்போது நாங்கள் இந்த வீடியோ குறித்து நான்கு விசாரணைகளை விஞ்ஞான ரீதியாகச் செய்து அது பொய்யானது என நிரூபித்துள்ளோம்.
நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியானதும் மீள்குடியேற்றப் பணிகளைப் பூர்த்தி செய்யலாம்.
இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் சிலர் ஊடுருவி உள்ளமை குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.
அடுத்ததாக, இலங்கை செய்தியாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்தின் கைது, தடுப்புக் காவல், நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு ஆகியன பற்றி அதிகம் பேசப்பட்டு விட்டது.
இந்த விடயம் தொடர்பாக என்னைப் பொறுத்த மட்டில் முக்கியமானது என்னவென்றால், உரிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதுடன், சட்டத்திற்கு அமைய ஏறத்தாழ 18 மாதங்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
வழக்கின் தாற்பரியம், இது சம்பந்தமான சட்டவிளக்கங்கள் ஆகியன பற்றிய முடிவு முற்றுமுழுதாக நீதிமன்றத்தைப் பொறுத்தது.
ஒரு நிறைவேற்று அதிகார உறுப்பினர் என்ற வகையிலும், மனித உரிமைகள் அமைச்சர் என்ற வகையிலும் எனது முதல் கவனம், சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அவதானிப்பதாகும்.
இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு அவரது சட்டவாதிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
இந்த நபருக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.