3 லட்சம் இலங்கை தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுவதை கண்டித்தும் அவர்களை விடுவிக்கக்கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
இதற்காக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் ஏராளமானோர் திரண்டனர். கருஞ்செட்டை தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஈ.வி.கே. சம்பத்சாலையில் சென்ற அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கி. வீரமணி மற்றும் சுப. வீரபாண்டியன், ஜனார்த்தனம் உள்பட 500 திராவிட கழகத்தினர் பொலிஸ் வானில் ஏற்றப்பட்டு வேப்பேரி பவுல் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: கி.வீரமணி
போராட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி,
3 லட்சம் ஈழத்தமிழர்களை ராஜபக்சே அரசு முள்வேலியில் அடைத்து வைத்துள்ளது. அவர்களை உடனே அங்கிருந்து அகற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளுக்கு விரோதமாக பல லட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.
தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்களவர்கள் குடியேறக்கூடாது, ஓரிரு மாதங்களில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இலங்கை தமிழர்களை மையமாக வைத்து இங்குள்ள மாநில அரசை குற்றம் சாட்டுகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால் குற்றம் சாட்டம் வேண்டாம்.
இலங்கை தமிழர்களுக்காக முதல் அமைச்சர் கருணாநிதி 2 முறை பொறுப்புகளை இழந்தார். ஆட்சியை துறந்தார். அவர் இதில் காட்டும் ஈடுபாடு தெளிவானவை. அதை பயன்படுத்தி கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுமானால் தமிழக மக்கள் ஒன்றுபட்டு தகுந்த பாடம் கொடுக்கும். இங்குள்ள அரசியல் போட்டிகளை வைத்துக்கொண்டு இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற ஒத்தகுரல் கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு உதவுவது யார் என்பதை பார்த்து பயன்படுத்தி கொள்ள வேண்டாமா? முதல் அமைச்சர் தலைமையில் முள்வேலியை அகற்றும் தெம்பும் திராணியும் எங்களுக்கு உண்டு.
நமக்குள் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியை இலங்கை பிரச்சினையில் பயன்படுத்தலாமா? இலங்கை அரசை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டக்கூடிய சக்தி இந்த அமைப்புக்கு உண்டு.
இது தேர்தலுக்காக கூடும் கூட்டம் அல்ல. லட்சியத்தை நம்புகிற கூட்டம். ஒத்த கருத்துள்ள ஒரு அரசு இருந்தும் மத்திய அரசு அலட்சியம் செய்கிறது.
இது அறப்போராட்டம். அடுத்ததாக இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்தப்படும்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேறுபக்கம் போகவேண்டாம். வேறுபக்கம் திசை திருப்பாதீர்கள். முதல் அமைச்சர் இலங்கை தமிழர்களுக்கு என்ன குற்றம் செய்தார். உணவு, உடை அனுப்பியது குற்றமா? போட்டிபோட வேறு அரசியல் களம் இருக்கிறது. இலங்கை தமிழர்களை பணயம் வைத்து பேசாதீர்கள் என்றார்