பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி ஆதாரத்தை வைத்துக்கொண்டு சிறிலங்கா மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரமுடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முறையில் தமிழ் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் சிங்களப் போர்ப்படையினரின் அட்டூழியங்கள் மற்றும் எல்லையற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிரித்தானியாவின் 'சனல் - 4' என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரப்பூர்வமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களை நிர்வாணமாக்கி கை, கால்கள், கண்களை கட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அவரது தம்பி கோத்தபாய ராஜசபக்ச, தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது கொலைக்குற்ற வழக்குகளை தொடர இதைத்தவிர வேறு ஆவணங்கள் தேவையே இல்லை.
இந்த ஆதாரங்களைக் கொண்டு இவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் வைக்க வேண்டும்.
இலங்கையில் சுமூகநிலை திரும்பியிருக்கிறது என்று சொல்லி அமைதியாக இருந்துவிடக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.